Friday 7 October, 2011

காதலில் விழுந்து காற்றில் மிதக்கையில்...

இரைச்சலற்ற சப்தங்களில்
போக்குவரத்தில்லா நெரிசலின் ஊடே
இடிபடாது பயணிக்கிறது
என் மனம்...

ஆவியற்ற கடுஞ்சூட்டில்
இனிப்பில்லா சக்கரை தித்திப்பில்
அரைமணி நேரமாய்
பருகுகிறேன் அரைகிண்ணம் தேநீர்..

குளிர்கின்ற வெயிலிநூடே
இளஞ்சூட்டின் தென்றல் கதகதப்பில்
இறுக்க போர்த்திக் கொள்கிறேன்
கம்பளிப் போர்வையினை...

பார்வையின் மொழியிலே சப்தமாய்
காட்டுக் கத்தலின் கட்டளையில்
மௌனத்தின் பேரிரைச்சலில்
எதிர் பார்க்கிறேன் பதிலை...

தினமும் நடந்திடும்
அரிதான விசயங்களையும்
கண்டும் காணாது
பொக்கிஷ புதையலையும்
அலட்சியப்படுத்துகிறேன்...

இரவின் கண் கூசும் வெளிச்சத்தில்
கண் இடுக்கிய பார்வையில்
கருப்பு கண்ணாடியில் செயல்படும்
எந்தன் அன்றாட நிகழ்ச்சிகள்...

மிகச் சாதாரண
எந்தன் அசாதாரண வாழ்க்கை
புலப்பட்ட விடையும்
விளங்காது வித்தியாசமாய்..

காதலில் விழுந்து
மேல் நோக்கி காற்றில் மிதக்கையில்...

No comments:

Post a Comment