Monday 16 July, 2012

மனம் வதை தடுப்புச் சட்டம்

மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு
அடுத்ததாய் ஆண் மனம் வதை
தடுப்புச் சட்டம் போட்டுப் பாருங்கள்.
பெண்கள் இல்லா
புது உலகம் காணலாம்.

அபூர்வப் பட்டியல்

பாலை நிலத்து மழையாய்
உண்மைக் காதலும்.
ஏனோ இரண்டும்
அபூர்வப் பட்டியலில்

தூக்கி எறிந்த காதல்...

தூக்கி வளர்த்த குடும்பத்தை
தூக்கி எறிந்து 
மணம் முடிக்கையில் 
இருந்த காதல் ஏனோ 
தொலைக்கப்பட்டு விடுகிறது,
புரிதல் இன்றி
கோபத்தில் தூக்கி எறிந்து 
பேசிடும் வார்த்தைகளில்...

தொடரும் என் விடியல்

எங்கு பார்த்தாலும்
உனது முகமாய்,
என் ஒவ்வொரு நிமிடமும்
உன் நினைவாகவே நகர்கிறது...

நீண்ட நேரமாய்
ஓரே இடத்தினில் பார்வையினை
நிலை நிறுத்துகிறது
என் தனிமை...

எப்பொழுதாவது உன்னைக்
கண்டிடமாட்டோமா என்றவாறே
என் விடியல் தொடர்கிறது....

கருணைக் கொலைகள்

நீயற்ற தனிமைகளை
கருணைக் கொலை செய்திட
தோன்றுகிறது உன் பிரிவில்...

ஏய்ப்பு காட்டும் நீ

ஆரம்பமும் முடிவும்
இல்லா தேடலில் நான்.
என் பின்னே ஒளிந்து
ஏய்ப்பு காட்டும் நீ...

மொத்தமாய் சிவந்திட

மடிக்கப்படும் வெற்றிலையுடனே
சேர்க்கப் படுகிறது
உன் முத்தமும்.
மொத்தமாய் சிவந்துட...

இருவரி குறள் என் காதல்

சுருங்கச் சொன்னால்
தனித்துப் பிரித்தால்
பொருள் தராத
இருவரி குறள் என் காதல்.
முதல் வரி காதல்.
இரண்டாம் வரி காமம்.

ஏனோ

தனக்கானவள்
காதலனையும், நண்பனையும்
தன்னிடமே எதிர்பார்க்க வேண்டுமென
எண்ணிடும் பலர் ஏனோ
காதலியையும், தோழியையும்
தனித்தே கேட்கின்றனர்.

எனக்கு மட்டும் காதலாய்...

இருவருக்கும்
ஒரே இடம்.
ஒரே நேரம் தான்.
பிறகு ஏனடி
நட்பாய் என் தோளில்
நீ கை போடுகையில்,
காதலாய் தெரிகிறது எனக்கு...

இறுகும் அணைப்பு

ஒருவருக்குப் போதுமென
எண்ணுகின்ற வேளைகளில்
மற்றவருக்குப் போதவில்லையென
மேலும் இறுகுகிறது
நமது அணைப்பு....

கட்டுண்டு போகிறது காதலும்...

இறுக்க அணைத்த நம் உறக்கத்திலே
எங்கே நான் முழித்தால்
உன் உறக்கம் கலையுமென நானும்,
உன் முழிப்பில்
என் உறக்கம் கலையுமென நீயும்,
கண் மூடியபடியே படுத்திருக்க,
கட்டுண்டு போகிறது காதலும்...

நீயும், நானுமாய்

என் மார்புக்கூட்டின் தலையணையில்
நீ தலை சாய்த்திருக்கையில்
என் கழுத்து தங்கச் சங்கிலியில்
உன் கருத்த உரோமச் சங்கிலியும் 
உறவாடுகிறதடி நீயும், நானுமாய்…

நட்பு.

இனம் பார்த்து
அமரா வண்டினாய்
முகம் பார்த்து
நெஞ்சில் அமரும் பூ...

புன்னகை நடுப்புள்ளி

நீள அகலங்களற்ற
சதுரத்தின் நடுப்புள்ளியாய்
உன் புன்னகையில் இருந்தே
தொடங்கப்படுகிறது
என் காதல்...

பணம்

பாசம் குடியிருந்த
கருவறை அகற்றி
கும்பாபிசேகம்
பணத்திற்கு...

காத்துக் கிடக்கும்

உன் கொஞ்சல்களுக்கும்
வர்ணனைகளுக்கும்
காத்துக் கிடக்கிறது
என் பால்ய வயது
புகைப்படங்கள்...

அணைப்பு

உனது வியர்வையில்
என்னுடல் நனைக்கும்
அணைப்பு வேண்டும்...

இன்றைய நிலவரம்

எனக்கானவள் எங்கோ
காதலித்துக் கொண்டிருக்க,
அவளுக்காய் நான் இங்கே
காத்துக் கொண்டிருக்கிறேன் 
அவளைக் காதலிக்க...

பிழை

கவிதையில் திருத்தப்படா
பிழை. 
உன் பிரிவு...

விலை ஏற்றம்

வருடத்திற்கு 100 ருபாய்
வருமானம் ஏறுகையில்,
வாரத்திற்கு 100 ருபாய்
விலை ஏறுகிறது...

நியாயம் இல்லா தேடல்

தொலைந்தது என
உறுதி செய்ததை தேடுவதில்
நியாயம் இருந்திட,
தொலைந்ததா இல்லையா என
தெரிந்திடாமலே என் தேடல்
நீண்டு கொண்டிருக்கிறது

தேடல்

கூட்டம் அனைத்தும்
கலைந்த பின்னரும்,
உன்னைக் கண்டிட
என் தேடுதல் தொடர்கிறது,
நீ வந்து சென்ற
தடயமாது கண்டிட...

உன் பார்வை

தேரிழுக்கும் வடமாய்
என்னை இழுத்துச் செல்கிறது
உன் பார்வை...

அலைபேசி

அலை பேசியின் வரவினால்
அழிவது குருவிகள் மட்டுமல்ல,
நொடியும் பேசிக் கொண்டே
கலையும் காதலும் தான்...

குழந்தையில்லா தாயின் ஏக்கம்

வெற்றி பெற்ற பாடல்களைக்
கேட்டிடும் வேளைகளில்
எனக்கொரு குழந்தை
இல்லையென வருந்துகிறேன்
அந்தப் பாடலை பாடிட...

Wednesday 4 July, 2012

என் கோபம்

நெருப்பின் மேல் 
படர்ந்திருக்கும் பனியாய் 
உன் அருகாமையில் 
என் கோபம்...

பிடித்த பாடல் நீ


புதுமைகள் பல
அலைவீசுகையிலும்
பால்ய வயது
பிடித்தப் பாடல் நீ...

நிலைக்க மறுக்கும்

தேவையானவர்களுக்கு
கிடைத்திடாத மின்சாரமாய்
உண்மையானவர்களிடம்
நிலைக்க மறுக்கும்
உண்மைக் காதல்...

குழம்பும் பகலவன்

தானும் சற்று
வேகமாய் விடிந்து விட்டோமாயென
எண்ணிப் பார்க்கும் பகலவன்,
அணைப்பில் இருந்து
மீளாத நம் உறக்கம் கண்டு...

Sunday 17 June, 2012

உன் அருகாமை இன்றி

எல்லாமிருந்தும்
சொர்க்கத்தின் அருமை
தெரியவில்லையடி
உன் அருகாமை இன்றி...

எங்கே நீ...

எங்கேயடி நீ.
எனக்காக பிறந்தவள் நீ எங்கே.

என் தோள் சாயாமல்

தலையணை சாய்ந்திருக்கும் நீ எங்கே..

கார் கூந்தல் போர்வையில்

என்னை மறைத்திடும் நீ எங்கே...

முதல் முறை

பருவம் வந்த குழந்தையாய்
நான் தரப் போகும்
முத்தம் பெறும் நீ எங்கே...

நான் தந்திடும் காத்திருப்புகளில்

இன்பம் காணப்போகும்
என் இதயம் நீ எங்கே...

என் தோழிக்கும் அன்னைக்கும்

இடைப்பட்ட உறவைக் காட்டிடும்
புது உறவு நீ எங்கே...

என் முக பாவங்களில்

உன் செயல் காட்டிடும்
என் பிம்பம் நீ எங்கே...

எனக்காய் சேர்த்து வைத்த

செல்லக் கோப புதையல் நீ எங்கே...

கண்ணோடு உனை காணாமலும்

நெஞ்சோடு அணைக்காது வேளையிலும்
நான் தேடும் நீ எங்கே...

என் பகலின் காதலாய்

இரவின் காமமாய்
முரண்பட்ட குவியல் நீ எங்கே..

உனது அழகையும்,

எனது அறிவையும்
அச்சில் வார்த்து வரும்
வாரிசு தரும் நீ எங்கே...

சீக்கரம் வாடி அன்பே

உன்னில் கரைந்து
என் வாழ்வின் அர்த்தம்
முழுமையடைய

உனக்காய் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு

காதலின் வாக்கியத்திலே
நம் வாழ்வும் முடிந்திட
காத்திருக்கும் உன்னவன்.

மறைக்கும் பழக்கம்

பெண்களிடம்
மறைக்கும் பழக்கம் அதிகமென
பலபேர் சொல்லக் கேட்டுள்ளேன்.
ஆனால் இன்று தான்
புரிந்து கொண்டேன் தாயே
குடிகார தந்தையிடம் மறைத்து
எனக்காய் சேர்த்து வைத்த
திருமண நகைகளில்...

கண்டிடாத இடம் செல்ல

உன்னை கண்டிடாத இடத்திற்கு
சென்றிட வேண்டுமென
ஆசை பட்டேனடி..
கண் காணாமல் போனாலும்
அது நடந்திடாதென,
கனவிலும் உன் பிம்பம் தந்து
வெறுப்பேற்றுகிறது காதல்...

இரவுகள் கவிழ்த்திய நினைவுகள்

இருள் போர்வைகள் போர்த்திய
என் இரவினில் மட்டும்
ஒளி அடித்துக் காட்டுகிறது
தனிமை தந்த நிலவு.

இலை விரித்ததும் வந்தமரும்

பெரும் பசி கொண்ட மனிதனாய்
வந்து அமர்கிறது
உனது எண்ணங்கள்
என் படுக்கை விரித்ததும்...

தீர்ப்பு சொல்ல வேண்டிய

காதலும் என் மீது சுமத்துகிறது
ஆயுள் முழுவதிற்குமான
இரவு தண்டனையினை...

அழும் குழந்தையின்

பசியினை தீர்க்கும் பாலினை
கவிழ்த்துக் கொட்டிய பூனையாய்
எனது இரவுகள் கவிழ்த்திய
உன் நினைவுகள்...

தேடிட வைக்கிறான் இறைவன்

அளவில் பெரிய பூந்தோட்டத்தில்
அழகிய வண்ணத்துப் பூச்சியை
தேடுவதே பெரும்பாடாய் இருக்க,
உன்னைப் போலொரு அழகு ரோஜாவை
தேடிட வைக்கிறான் இறைவன்
இந்த நிஜ உலகில்
உன்னை தொலைத்த என்னை...

நீயும், நானும்...

வெயில் தாங்கி
குளிர் தாங்கிடாத
என் உடலுக்கு
நிம்மதி உறக்கம் தரும்
இரவினில் நான் போர்த்தும்
கம்பளி போர்வை நீ,,,

பெருமை பொங்க

உன்னை அழகுபடுத்த
பகலில் நீ உடுத்தும்
பட்டுச் சேலை நான்..

நினைவின்றியே முடிந்து போகிறது

என்ன பேசுவதென்றே
தெரிந்திடாமல் தொடங்கப்பட்ட
நம் பேச்சுக்கள்,
என்ன பேசினோம்
என நினைவின்றியே
முடிந்து போகிறது...

இதழுக்கான அடைமழை

வறண்டு போன
என் இதழுக்கான
அடைமழை
உன் அருகாமை...

வலியும், ஆனந்தமும் ஒரு சேர

பட்டுப் போன மரத்தின்
விழுந்துடப் போகும்
கடைசி இலையின் வலியும்,
துளிர்க்கும்
முதல் இலையின் ஆனந்தமும்
ஒரு சேர
உன் காதல் பார்வையில்..

உன்னை கரம் காட்டுகிறது

அன்பிற்கான
அர்த்தம் தேடுகையில்
உன்னை நோக்கி
கரம் காட்டுகிறது
அகராதி.