என் செயலில் உன் வார்த்தை.
உன் செயலில் என் வார்த்தை.
தலையணைகளுக்கு பெரும்பாலும் விடுமுறை.
கண்ணீர் பார்க்கும் வாய்ப்பு
உன் அடங்கா சந்தோசச் சிரிப்பில்.
நாட்காட்டி கிழிக்கையில்
அதற்குள் முடிந்ததாய் ஏக்கம்.
உனக்கும் எனக்கும்
முதல் குழந்தையாய் நாம்.
பெரும்பாலும் பிரிவென்பது உடலில் மட்டும்.
உன் நினைவுகள் யாவும்
என் கரம் பற்றும் கைரேகையாய்...
பசியார உன் புன்னகையும்
தாகம் தணிக்க முத்தங்களும்.
தனிமைகள் சாபமாய்
உடனிருப்புகள் சாகாவரமாய்.
பாசம் அடைக்கப்படா கடனாய்.
காதம் மட்டும் ஒரே சொத்தாய்.
இரவில் என் போர்வையாய் நீ.
பகலில் உன் சேலையாய் நான்.
ஒரு நொடி கோபத்திற்கு
ஒரு மணி நேர முத்தம்.
ஒரு நிமிட மௌனத்திற்கு
ஒரு நாள் கொஞ்சல்.
காமத்துப் பாலில் எழுதப்படா
குறளாய் நீயும் நானும்..
மொத்தத்தில் பகலில் தோழமையும்
இரவில் காதலியுமாய்
வாழ்க்கை கழிய வேண்டும்...
No comments:
Post a Comment