Thursday 30 December, 2010

அருமை

மலரின் மென்மையை
தெரிந்து கொண்டேன்
உன் இதழில்...

நீயும் தெரிந்திருப்பாயடி
மலரின் காவலன்
முள்ளின் அருமையை
எனது மீசையில்...

திருவிழா

ஒவ்வொரு திருவிழாக்களிலும்
உனைக் கண்கள் தேடிடுதே
நீ எனக்கானவள்
இல்லையென்ற போதிலும்...

உன் வண்ணத்தில்
உடைகொண்டு செல்பவளைக்
கண்டிடும் வேளையிலும்,
நீயாகக் கூடாதா என
கெஞ்சிக் கேட்கிறது...

வேறொருத்தியின்
நடையில்
சாயலில்
உயரத்தின் அளவிலும்,
நீ கானல் நீராய்
காட்சி தந்து மறைகிறாய்...

கூட்டத்தில்
தொலைந்த குழந்தையாய்
தேம்பி அழுகிறது இதயம்,
எங்கேனும் உன்னைக்
கண்டிடமாட்டோமா என்று..

அழகு பட்டுடுத்தி
திருவிழா வீதியில்
அன்னமாய் நீ வருகையில்,
பவனியாகத் தானடி
காட்சியானது என் கண்களுக்கு...

என்னைக் கண்டதும்
உன் பளிர்முகத்தின் புன்சிரிப்பும்,
கள்ளத்தன பார்வைகளும்,
காற்றினில் வரையும் சைகைகளும்,
பிற பெண்கள் பார்க்கையில்
மிரட்டிடும் கண்களுமாய்
காட்சி தந்த தேவதையே,
உன் வரம் மீண்டும் கிடைத்திடுமா?

கடந்து போன
நொடிகள் எனத் தெரிந்தும்,
தேடித் தொலைக்கிறது மனம்....

இம்முறையும்
உன்னைக் காணாமல்
ஏமாந்த என் காதல்,
அக்கூட்டத்திலே
தொலைந்து போய்கிறது...

பலூன் கேட்டு கிடைக்காத
குழந்தையின் அழுகையாய்
நாம் சென்ற பாதையில்
இதயம் திரும்பி வருகிறது...


Tuesday 28 December, 2010

கல்லறை

அன்று நான் எழுதிய
கவிதைகள் எல்லாம்
உன் இதழின் ஈரத்தில்
நனைந்திட உன் முகவரியை தேடி,
இப்பொழுது கவிதைகள் எல்லாம்
கண்ணீரில் நனைந்து
நெஞ்சில் செல்லரித்துப் போன
நம் காதலின் கல்லறையை தேடி...

மழையும், கண்ணீரும்

நீயில்லா நேரங்களில்
மழை பொழியும் பொழுது,
அலைபேசியில் கடிந்து கொள்வாய்
மழையில் ஆடுகிறாயா என்று...
மழையில் நனைந்து
உடல்நலம் பாதிக்கும் என்றல்லவே...
உன்னை விட்டு ஆடுவதால் தான் என்று
நன்றாக நானறிவேன் செல்லமே...
இன்றும் மழை பெய்திட
நனையத் தானடி செய்கிறோம்
நானும், உன் நினைவின்
வெளிப்பாடான கண்ணீரும்...

கவிதைகள்

காதலில்
ஏதோவொரு நிகழ்ச்சியின்
நினைவலையில் மிதக்கையில்,
கரை ஏறுகிறேன்,
வெள்ளைத்தாளில் வார்த்தைகள் மூலம்
கை கொடுத்து ....

காதல்

ஏழு ஜென்மத்தில்
வாழ வேண்டிய காதல் யாவையும்
இப்பொழுதே அனுபவித்ததால்,
இந்த ஏழு ஆண்டு
காதலே போதுமென்று
கடவுளும் எண்ணிவிட்டார் போலும்...

நீயன்றி என் பிறந்த நாள்

பிறந்த நாளன்று
உன் வாழ்த்து தான்
முதலாவதாய் இருக்குமென்று
வழக்கம் போலவே
எண்ணித் துணிகிறது மனம்,
எட்டாக் கனியாக
ஏக்கப் பார்வை ஏனென்று
எட்டி உதைக்கிறது காலம்...

பிரசவிக்கும் வலிகள்

எங்கள் காதலில்
இனிமைகளுக்குப் பஞ்சமில்லை.
மகிழ்ச்சிகளுக்கு அளவில்லை...
ஒவ்வொரு முறையும்
காதலைப் பற்றி எழுதிட வேண்டி
இனிமைகளை அசை போடுகையில்,
வாழ்ந்த சொர்கத்தை தொலைத்து விட்டு,
நரகத்தில் வெந்து தவிக்கையில்,
கையோடு தழுவிய தாயின் மரணத்தில்
கண்ணீரையே உணவாய் உண்டு
வாழும் குழந்தையின் நிலையில்...
தானாகவே என்னையும் அறியாமல்
என் மனதிற் வழியே,
எழுதுகோலில் சேர்ந்த என் கண்ணீர்,
வார்த்தையாக்கி பிரசவிக்கிறது வலிகளை...

தடை

நீ இல்லாத வாழ்க்கையை
வாழப் பிடிக்காமல்,
செத்துவிடத் தாண்டி
துணிகிறது மனம் - ஆனால்
தடைபோட்டு தடுக்கிறது
பெற்றோரின் பாசம்,
உடன் பிறந்தவளின் உள்ளம்,
நண்பர்களின் நேசம்,
எனக்கான கடமைகள்...

பாராட்டுக்கள்

வார்த்தைகளுக்கே இவ்வளவு பாராட்டுகளா?
அப்படி என்றால்
இந்த வரிகளை பெற்றெடுத்து,
வாழ்ந்து முடித்த என் காதலுக்கு?

பிறந்த நாள்

வழக்கமாய் நடு இரவு வரையிலும்
உன் குறுஞ்செய்தி என்னை கொஞ்சிடும்..
என் பிறந்தநாளின் முன்னிரவிலும்
அப்படியே என்று விழித்திருக்கையில் ,

தூங்கிவிட்டதை போலே பாசாங்கு செய்திடுவாயடி,
கொஞ்சிப் பேசலாம் என்ற ஏக்கத்தில் சூடு வைத்து
இராக்கெட்டாய் எகிற வைத்தபடியே
நித்திரையில் என்னை மூழ்கிடச் செய்திடுவாய்...

ஈராறு மணியில் முட்கள் இரண்டும் சேர்ந்ததைக் கூட
நீ கூப்பிடும் அழைப்பு மணியில் தான்
கடிகாரமும் தெரிந்து கொள்ளும்...

தூக்கத்தின் கலக்கத்தில், அலைபேசியின் சிணுங்களில்
உன் கெஞ்சல் குரலில் நீ சொல்லும்
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா செல்லம்"
வாழ்த்துகளில் தானடி நான் பிறந்ததற்கான
அர்த்தத்தையும், மகிழ்ச்சியையும் உணர்ந்தேன்...

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
நேற்றும் கூட அப்படியே உறங்கிவிட்டேனடி
நீ வாழ்த்த என்னை எழுப்புவாய் என்று...

இன்றும் நீ எனக்கில்லை என்று எடுத்துச் சொல்லி
நித்திரையில் இருந்து எழுப்பிவிட்டது விடியல்
ஏனோ உன் காதலில் இருந்து எழுப்பிவிட மறந்து....

உன் வாழ்த்து

இன்றும் விழித்துக் கொண்டே
துடித்துக் கொண்டிருக்கிறேனடி
என் இதயத்தோடு,
என் இதயமான
உன் வாழ்த்து அழைப்பிற்காக
ஏங்கி பரிதவித்துக் கொண்டே,
நீ இந்நொடி
என்னுடன் இல்லை என்ற போதிலும்
என்ன செய்ய?
நீ மாற்றானுக்கு
மனைவியாய் ஆனாலும்,
உன் காதல் என்றுமே
எனக்குத் தானடி சொந்தம்.

மோட்சம்

உன்னைப்பற்றியும்,
என்னைப்பற்றியுமான
எல்லா விசயங்களையும்
பேசி தீர்த்துவிட்டோம்...
இந்நொடி வரையிலும்...

அர்த்தமற்ற பேச்சுகளும்,
முற்றுபெற்றாகிவிட்டது...
மௌனமான நிமிடங்கள் தான்
இனிமேல் பிறக்க எத்தனிக்க இருக்கிறது
என்று தெரிந்த பிறகும்,
அப்புறம் என்கிறாயே...

இனிமேல் உன்னிடம் சொல்லா
என் காதல் மட்டும் தானடி மிச்சம்...
ஒருவேளை அதைத்தான்
அறியத் துடிக்கிறாய் போலும்....

அதையாவது உன் நாவில் சொல்லடி...
காதலுக்கும், அந்த வார்த்தைக்கும்
மோட்சம் கிடைத்துவிடும்...

கொடுமை

நிறுத்திவிடடி பெண்ணே
உன் நினைவால்
என் இதயத்தை - பெட்ரோல்
ஊற்றிக் கொளுத்துவதை...
பெட்ரோல் விலையும்
உயர்ந்துகொண்டே போகிறது
உன் நினைவுக் கொடுமையின்
எல்கைக்கு...

இன்றைய காதல்

ஒருத்தரை ஒருத்தர்
நன்றாக புரிந்துகொண்ட
காதலர்களின் வெற்றி
மணமேடையில் மணக்கோலத்தில்....
வேறொரு ஜோடியுடன்...

நம் காதலும்

மதுரை மண் மணக்க,
மல்லிகைப் பூ மணக்க,
அன்றோ நாம் சென்ற வீதிகளில்,
நான் போகையில்,
உன் நினைவோடு
நம் காதலும் கமகமக்க...

இடம் மாறுதல்

இன்றோடு
நான் வாழ்ந்த இடத்தில் இருந்து
பொருட்கள் எல்லாம் எடுத்தாகிவிட்டது,
ஒன்றாய் வாழ்ந்த
நம் நினைவுகளை விடுத்து...

ஆசிரியர்

என்னைப் பொறுத்த மட்டில்
மிகச் சிறந்த ஆசிரியர் நீதானடி...
உன் கண்ணின் அசைவிலேயே
காதல் மொழியினை கற்றுத்தந்தாய்...
உன் கண்ணசைவும், உதட்டுச் சுளிப்புமே
அம்மொழிக்கு இலக்கணமோ?

கண்ணீர் மழை

எதிர் எதிரே மோதிக் கொள்ளும்
மழை மேகமும் நானும் ஓன்றுதானடி.
நான் சென்ற இடங்கள் யாவும் செல்கையில்
கண்களில் ஓடும் பொழுது,
உன் நினைவுகள் எதிரே மோதிடுகையில்
கண்களில் கண்ணீர் மழை...

அழுகை

அழுகை...
அவளோடு வாழ்ந்த நாட்களில்
கண்மண் தெரியாத சந்தோசத்தில்,
இன்று அவள் இல்லாத என்னுடல்
இந்நொடியே மண்ணோடு மண்ணாக
மட்கிப் போகவில்லையே
என்ற ஏக்கத்தில்...

கால் கொலுசு

நீ நடக்கையில்
உன் கால் கொலுசுகள்
என்னை வெறுப்பேற்றுகிறது...
நீ சேர முயலும் உன்னவளிடம்
நான் சேர்ந்துவிட்டேன் என்று...

என் இதயம்

உன் மேல் காதல் வந்த பொழுதும்,
நீ என்னை விட்டுச் செல்லும் போதும்
கவிதைகள் எழுதினேன் பல - ஆனால்
நாம் காதலித்த காலத்தில் மட்டும் ஏனோ
கவிதைகள் தோன்றவில்லையடி...

காரணம் கேட்க
எனக்காக வாழ்ந்த நீ இல்லை இன்று.
நீயாக என்னில்,
எனக்காய் துடிக்கும்
என் இதயத்திடம் கேட்டேன்..

காதலிக்கும் முன்னும், பிரிந்த பின்னும்
உன்னுடன் நானிருந்தேன்...
உன் எண்ணத்தின் வெளிப்பாடாய்,
எண்ணங்களை பயணித்து
வார்த்தைகளாய் மொழி பெயர்ந்தேன்
உனக்காய் உடனிருந்தேன்.

காதலிக்கும் பொழுது தான்
என்னை அவளிடம் தந்துவிட்டு
அவளைத்தானே
உன் இதயமாய் எண்ணி வாழ்ந்தாய்...
அதனால் தான் என்றவாறே
துடிக்கத் தொடங்கிறது எனக்காய்...

சொன்னாலே போதுமே

காதலைப் பற்றி சொல்லிட
இத்துணைக் கவிதைகள் எதற்கு அன்பே
சுருக்கமாக
நீயும், நானும் எனச்
சொன்னாலே போதுமே...

அர்த்தமற்ற நாட்கள்

நெஞ்சுக் கூட்டை அடுப்பாக்கி
உன் நினைவால் நெய்யூற்ற
பற்றி எரிகிரதடி என்னிதயம்..
நெருப்பின் தணலில் தகதகத்து
உருவமற்ற மெழுகாய்
வெந்து உருகுகிறதடி
அர்த்தமற்ற என் நாட்கள்...

இறந்த காலம்

முடிந்து போன நேற்று
எல்லாருக்கும் இறந்த காலமாய்...
எனக்கு மட்டும்
இறப்பினைக் கொணரும் காலம்...
மாலை நேரம்
நம் காதலால்
உன் நினைவில் படும்
கஷ்டங்களை எல்லாம்
இறக்கி வைக்க
கோவில் உள்ளே செல்ல,
நீயோ தூக்கச் சொல்லி அழுகும்
உன் குழந்தையோடு...
சமாதானம் செய்ய தூக்கி வைத்தாய்..
குழந்தையை மட்டுமில்லையடி
உந்தன் காதல் வலிகளையும்
மேற்கொண்டு என்னில்...

பழமொழி

கற்றுத்தந்தவரை
உள்ளளவும் நினைக்கச்
சொல்லுது பழமொழி..
எனக்கு கவிதை எழுத
கற்றுத்தந்தவள் தான்
இன்று மாற்றானின்
மனைவி ஆகிவிட்டாளே..
பிறன் மனை நோக்கா?
என வேறு பழமொழி...
நான் என்ன செய்ய?

காதல் ராட்சசி

நீ ஒரு காதல் ராட்சசி..
உந்தன் நினைவுப் பசிக்கு
என் நேரங்கள் போதவில்லையோ?
வாழ்க்கையே கேட்கிறாய்...

காதலில் மட்டும்

மணிக்கணக்கில் காத்திருப்பும்
பதில் வந்திடும்வரையில் பொறுமையும்
இந்நாள் வரை கண்டிராத மனங்களும்
புன்னகை பூத்து வரவேற்பது
காதலில் மட்டுமே...

மூன்றாம் உலகப்போர்

உன் விழிகள் பார்க்கையில்
மூன்றாம் உலகப் போர்
ஒவ்வொரு முறையும் என்னுள்...
ஆனாலும் வழக்கம் போல்
உன்பக்கம் மட்டும் இழப்பில்லை...
என்னிடம் இழப்பதற்கு
இனி ஏதும் இல்லை அன்பே...

நான்

வரம் பெற தவம் செய்து,
கடவுள் மனமிரங்கி
காட்சி தரும் வேளையில்,
வரத்தை மறந்து கடவுளின்
அழகில் லயிக்கும் பக்தனின்
நிலையில் தானடி
காதலைச் சொல்லவந்து
உனைப் பார்த்து மெய்மறந்து நிற்கும்
நானும்...

நிஜங்கள்

நிஜங்கள் யாவையும்
நிழற்படமாய் பதித்தால் என்னவோ
நிஜமாக வேண்டிய நினைவுகள் யாவும்
நிழலாகவே போனதோ? என்னை
நிலையில்லாமல் செய்ததோ?

காதல் வலி

திக்கு திசையற்ற
காதல் உலகினில்,
அன்பெனும் கரம் கொண்டு
என்னை அழைத்து வந்து,
இப்படி பாதியிலே
அறுந்துபோன காத்தாடியாய்
தவிக்க விட்டுவிட்டயடி..
உன்னைத் தேடியும் பயனில்லை
மறந்து போய்
வெளியேறவும் வழியின்றி
விழியில் வழியும் நீரின்
வலியோடு...

காகிதப் பூ

காதலில் தோல்வி அடைந்த பின்
எனக்கான வாழ்க்கை
இல்லையென்று போனாலும்,
என்னைச் சுற்றி உள்ளவர்களுக்காக
வாழும் போதும் இனிமைதான்.

எனக்காக வாழாமல்
என்னைச் சார்ந்தவர்களுக்காக
வாழ்வது தானே வாழ்க்கை.
ஆனால்,
எனக்காய் என்றால்
வாழ்க்கை ஒரு காகிதப் பூ...

சூடா மலர்

என் மனதையும்
காதலையும்
நன்கு அறிந்த
நீ ஏற்காத நான்...
ரசித்துச் சென்றதில்
சூடாத மலர்..

வருகைப் பதிவேடு

நான் தினமும்
கல்லூரிக்கு வந்திடுவது
வருகைப் பதிவேட்டிற்க்கு அல்ல...
காதலின் தினத்தில்
அன்றைய வருகைக்கு
உன் ஓர விழிப் பார்வை எடுக்கும்
பதிவேட்டிற்க்குத் தானடி...

இருமல்

உணவருந்தும் வேளையில்
நான் இருமினேன் - உடனே
நான் தான் நினைத்தேன் என கூறினாள்...
அவள் இருமினாள்
நான் ஏதும் கேட்காததால்
என்னை நினைத்தாயா?
என்னைப் பார்த்து வினவினாள்..
நான் பதிலேதும் கூறாமல்
அருகில் உள்ள
அவள் தங்கையை பார்த்தேன்
அவள் இருமுகிறாளா என்று...

உன் தங்கைக்காக

நிலவு இல்லையென்றாலும்
வானம் இருக்கும்
விண்மீனுக்காக...

மணம் இல்லையென்றாலும்
மலர் இருக்கும்
வண்டுக்காக...

காட்சி இல்லையென்றாலும்
கண்கள் இருக்கும்
உணர்ச்சிகளுக்காக...

நீ இல்லை என்றாலும்
நான் இருப்பேன்
உன் தங்கைக்காக...

ஞாபகம்

பெண்ணே
ரோஜாவினைப் பார்க்கையில்
உன் ஞாபகம்...
அதிலிருக்கும்
முட்களைப் பார்க்கையில்
உன் அண்ணன்கள் ஞாபகம்...

வாழ்க்கை நொடிகள்

கூட்டை வைத்துக் கொண்டு
ஊறும் நத்தையின் பயணம் கூட
வேகமானது தானடி...
உன் நினைவுகளை
நெஞ்சில் சுமந்து கொண்டு
கழியும் என் வாழ்க்கை
நொடிகளைக் காட்டிலும்...

தற்புகழ்ச்சி

தன்னைத் தானே புகழ்வது தகுமோ?
தற்புகழ்ச்சி கூடாதடி அன்பே..
அழகாய் இருக்கிறது எனக்
நீ கூறிய கவிதைகள் யாவும்
உன்னைப் பற்றி எழுதியது தானடி..

வார்த்தைகள்

அது எப்படியடி பெண்ணே
உன்னைப் பற்றி
எழுதிடும் பொழுது மட்டும்
என் வார்த்தைகள்
வாஞ்சனை இல்லாமல்
கோர்வையாய் வருகிறதடி...

சிரிப்பு

வாய் விட்டுச் சிரித்தால்
நோய் விட்டுப் போகுமாம்
யார் சொன்னது?
அவள் என்னைப் பார்த்து
சிரித்ததை பார்த்த பொழுதே
நோய் வந்து சேர்ந்தது
என்னுள் காதலாய்...

மின்னல்

மின்னலே
என்னவளிடம் கற்றுக்கொள்
உயிரை எப்படி
பறிக்க வேண்டுமென்பதை.
அவள் கண்களில் இருந்து...

ரோஜா

ரோஜாவே
என்னவள் மனதில் இடம்பெற
வருடங்கள் பல காத்திருக்கிறேன்
ஆனால் நீ
எத்தனை வருடங்கள் காத்திருந்தாய்
இன்று அவளின் கூந்தலில் நீ...

கால்

பூ பட்டு கால் நோகுமோ
என்று கேள்விப்பட்டுள்ளேன்
அதை இன்று தான் உணர்ந்தேன்
நீ கால் இடறி
என் காலில் மிதிக்கும் பொழுது...

நீயும் நிலவும்

மானிடர் இரசிக்க
நிலவைப் படைத்த இறைவன்
அந்த நிலவும் இரசித்திட
உன்னைப் படைத்திட்டான் போலும்..
தினமும் பிறைநிலவாய்
திரைமறைவில் நின்று எட்டிப்பார்க்கும்
பழக்கம் அதனால் தானோ...

கண்ணீரை கேட்கிறது

கவிதை நானும் எழுதுகையிலே
வெளிறிய வாழ்க்கையை காகிதமாக்கி
வாழ்ந்த நிமிடங்களை வார்த்தையாக்கி
மையாக என் கண்ணீரைக் கேட்கிறது
உன் நினைவுகள்...

Monday 27 December, 2010

கொடுமை

மரணத்தின் வலி தான் கொடுமையாம்...
உன்னைக் காணாத நாட்களின்
நான் அனுபவிக்கும் இம்சைகளை
அனுபவிக்காதவர்கள் கூறியது...

என் இதயம்

மழைகானா பயிரானது
உன்னைக் காணாத நாட்களில்
என் இதயம்...

போட்டி

இமைகளோடு
போட்டிப் போட்டுக் கொண்டு
விழித்திருக்கிறது என் இதயமும்
உன்னைக் காண வேண்டும் என்று...

நித்திரை

உன்னால் மட்டும் எப்படியடி
தூங்கமுடிகிறது...
நிதமும் என் நித்திரையை
கெடுத்துவிட்டு...

அவளது நினைவில் நான்

முரடனாய் திரிந்த எனக்கு
தோழியாய் வந்தமைந்தவள்...

நான் புரியும் தவறுகளுக்கு
அன்பினால் தண்டித்தவள்...

கல்வியையும், காலத்தையும்
கற்றுக்கொடுத்தவள்..

என் எதிர்மறை ஆட்டத்திற்கு
முற்றுப்புள்ளி வைத்தவள்...

தோழியென்ற வார்த்தைக்கு
அகராதி செயவித்தவள்...

தனித்திருந்த என்னை குடும்பத்தோடு
இணைத்தவள்...

என் பெற்றோரும் பாராட்டா
என் திறமையை வெளிக்கொனர்ந்தவள்....

இவள் அன்பினில் வாழ்கை கழியாதா
என்ற ஏக்கத்தை உண்டாக்கியவள்...

புரிந்த தோழியை விரும்புவது தகுமோ
என்ற வினாவை கேட்டவள்...

கடைசியில் என்
இதயத்துணையாய் நின்றாள்...

ஜாதியின் பசிக்கு
இரையாகும் காதலில்
எங்களது ஏழரை ஆண்டு காதலும்
விதிவிலக்கல்ல...

என் உயிர் பறிக்கும்
பாசக்கயிர்றைக் காட்டி
அவளுடன் என் பாசத்தை பிரித்தனர்...

மனதினை புதைத்து
திருமணத்திற்கு பந்தற்கால் நட்டனர் ...

அவளது நெஞ்சில் மாங்கல்யம் தொங்கிட...
எனது நெஞ்சை காதல் நினைவுகள் இறுக்கிட..

இன்று அவள் நினைவில்
நான் உள்ளேனோ என்று தெரியாது
அவளது நினைவில் நான்...

உதிரத்தை கண்ணீராய்

உன் நினைவைச் சுமந்து
உடலெங்கும் பரவியுள்ளதடி
என் உதிரம்...
உனது நினைவுக் கொடுமையிலிருந்து
மீளத்தானடி வடிக்கிறேன் உதிரத்தை
என் கண்ணீராய்...

உன் பார்வை

பெண்களின் கண்களை
மீன்களுடன் ஒப்பிடுவது
சரிதான் போலும்...
நீ பார்க்கும் பார்வையொன்றும்
என்னிதயம் கடித்துச்
செல்கிறதடி....

நீ

பூத்தது
முட்கள் இல்லாத ரோஜா
தோட்டத்தில் இல்லை
எனது இதயத்தில்
*** நீ ***

தீவாய் உன் காதல்

நீ என்னைப் பார்த்தவுடன்
காதலின் கடலில் விழுந்துவிட்டேன்...
நினைவென்னும் அலைகளிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
மூழ்கிக்கொண்டிருக்கிறேனடி...
விழுந்த என்னைத் தாங்கிட
ஓடமும் இல்லை...
கை கொடுத்து இழுத்துச் செல்ல
துணையும் இல்லை...
தேடிக் கொண்டிருக்கிறேனடி
என்கேவாவது தெரியுமா
தீவாய் உன் காதல்...

என் நாட்கள்

ஆரம்ப காலங்களில்
நேரமே போகாமல் அலுத்துக்கொண்ட
நாட்கள் தான் எத்தனையோ...
ஆனால் இன்றோ
உன்னை நினைக்க ஆரம்பித்தால்
பாலைவனத்தில் விழுந்த மழையாய்
கரைகிறதடி நொடியில்...

நூலாம்படை

என் நெஞ்சமெங்கும்
நீதானடி நீலநிற வானமாய்
வியாப்பித்துள்ளாய்....
உன் நெஞ்சில்
எங்கேயாவது மூலையில்
சிறு நூலாம் படையயாவது
படிந்துள்ளேனா அன்பே..

காதல் நினைவுகள்...

நினைவுத்
தீப்பொறி பட்டுவிட்டால்
எரிந்து போகும் கற்பூரம்
காதல் நினைவுகள்...

கண்ணீர் வரிகள்

அவளுடன் வாழ்த்த வாழ்க்கையை தான்
வார்த்தையாக்கி உள்ளேன்.
அவளின்றி வாழும் வாழ்வை
கனவாகக் கருதியே வாழ்கிறேன்.
விரைவில் கலைந்துவிடாதா என்று...

மனம் - நடக்காத நிகழ்வுகளையே தான்
அடிக்கடி என்னுகிறதேன்று
என் மூளைக்குத் தெரிகிறது.
தெளிந்து விடத் துடிக்கின்றது - இருப்பினும்
அவளது நினைவுகள் என்னை மூழ்கடித்து விடுகிறது.

அந்த வலியை மனதிலே வைத்திட
எனது சுற்றமும், சூழ்நிலையும் தடுக்கிறது.
அதனால் தான்
என் வலிகளை வடிக்கிறேன்
கண்ணீர் வரிகளாக...

உன் முகம்

ஒரு துளியில்
ஆயிரம் வெண்ணிலாக்கள்
சிந்திச் சிதறிய
மழைத்துளியில் தெரியும்
உன் முகம்...

பொறாமை

பூக்களின் மீதும்
பொறாமை தானடி
நீ கூந்தலில் சூடும் பொழுது...

உன் கண்கள்

கண்களை பறிக்க
மின்னலைப் படைத்த இறைவன்
என் உயிரைப் பறிக்க
உன் கண்களை படைத்துவிட்டான்...

வேடிக்கை

மலர்கள் வாடுவதையும்
வேடிக்கை பார்க்காத நீ
என் மனதை மட்டும்
வாட விட்டு வேடிக்கை
பார்ப்பது ஏனோ...

அதிகமே

சொந்தங்களில்
நான் கண்ட அன்பிலே
உன் காதலில் நான்
கண்டது அதிகமே...

அணைக்காதோ

என் விழிகள் பேசும் பொழுது
உன் மௌனம் பேசாதோ...

என் சுவாசம் தேடும் பொழுது
உன் வாசம் கிடைக்காதோ...

என் கண்கள் பார்க்கும் பொழுது
உன் இதழ்கள் மலராதோ...

என் கவிதைகள் படிக்கும்பொழுது
உன் கனவுகள் திறக்காதோ...

என் நினைவுகள் தோன்றும்பொழுது
உன் மறுப்பு கலையாதோ...

என் அவஸ்தைகள் பார்க்கும்பொழுது
உன்னிடம் இறக்கம் பிறக்காதோ...

என் மரணம் தழுவும் பொழுதும்
உன் காதல் அணைக்காதா....

பெயரின் சிறப்பு

என் பெயரின் சிறப்பை
இன்று தான்
தெரிந்து கொண்டேன் பெண்ணே...
உன் உதடுகள்
என் பெயரை உச்சரித்த பொழுது....

எங்கள் வாழ்க்கை

காதலைச் சொல்லி
ஆண்டுகள் ஏழு வாழ்ந்து...
அவளுக்கு மணமாகி,
இன்றோ தாயாரும் ஆகிவிட்டாள்...
நான் எழுதிய கவிதைகள் அனைத்தும்
என் வாழ்வில் நடந்தைவையே....
அவளோடு வாழ்ந்து முடித்தாகி விட்டது...
அவளோடு வாழ்ந்த நாட்கள்
என் வாழ்வில் திரும்பக் கிடைக்காத
பொக்கிசங்கள்...
வம்படியாக என்னிடம் இருந்து
பறித்துச் செல்லப்பட்ட செல்வங்கள்...
நாங்கள் வாழ்ந்த
வாழ்க்கையின் நினைவுகள் மட்டும்
நெஞ்சோடு புதைந்து போன புதையல்கள்...

காதல் வரம்

காதலிலே
அனுபவிக்கும் மகிழ்ச்சியை விட
பல மடங்கு வலியை அனுபவிக்கக்
கற்றுக்கொள்ள வேண்டும்...
சுமையான வலிகள் தரும் சுகங்கள் தான்
காதலின் கிடைக்கப் பெறா வரம்.
காதலில் வென்று திருமணத்திற்குப் பின்
காதலை தொலைத்து விட்டு
வாழும் மனிதர்களில்
எனக்கோ மரண வாசல் வரை
காதலும் அதன் நினைவுகளும்
துடித்துக் கொண்டே இருக்கும்...
இந்த வரம் ஒன்றே போதும்

காதல்

காதல்
இருவேறு முகவரிகளில்
ஒருவர் வாழும் விந்தை..

மோட்சம்

தினம் தினம்
என் கண்ணீர் மழையில்
நனைந்திடும்
என் தலையணை கேட்டது
இன்னும் எவ்வளவு கண்ணீர்
உன்னிடம் உள்ளதென்று?
என்னவள் தந்த
மக்ழிச்சி தான் தினமும்
கண்ணீராய் கரைகிறது என்றேன்..
அவள் தந்த
மக்ழ்ச்சிகள் யாவும் கரைய
உன் ஆயுளும் வேண்டிடுமே?
அது வரையில்
தன் ஆயுள் போதாதென்று
சொல்லிக்கொண்டே
மோட்சம் பெற்றது தலையணை....

விருப்பங்கள்

அவளுக்கென
விருப்பங்கள் இருந்தாலும்
எனது விருப்பங்களை
அவளுடையதாக விரும்பும் ஜீவன்
என் காதலி....

இரை

சில நிமிடங்கள்
நாம் ஒன்றாய் இருந்த தருணங்களை
மனம் அசைபோடுகையில்
பல மணி நேரத்தை
நினைவுகள் இரையாக்கி உண்டுவிடுகிறது.
காதலின் நினைவுப் பசிக்கு
நிமிடங்கள் போதாது போல்..
அதனால் தன் என்னவோ
உன்னுடன் வாழ்ந்த
இந்த ஏழு ஆண்டுகளுக்காக
என் வாழ்க்கையையே
இரையாக்கிக் கொண்டிருக்கின்றது
உன் நினைவுகள்....

கை கோர்த்து

நாம் தினந்தோறும்
கை கோர்த்து நடந்து சென்ற பாதையில்
இன்றும் வலம வருகிரேனடி அன்பே
கைகோர்த்த படியே நீயின்றி
உன் நினைவுகளோடு...

கண்ணீர்

அன்று உன் உதட்டில்
கசிந்த புன்னகையில்
இன்று என்னிதயம்
கண்ணீர் வடிக்கின்றது...

காதல் சொல்ல

அன்றொரு அழகிய மழைக்காலம்..
கல்லூரி நேரம் முடிந்ததை
அறிவிக்க அடித்த மணி...

எங்கள் காதல் மழைக்கான
அறிகுறி இடியும்
அதுதான் போலும்...

இத்தனை நாள்
வார்த்தை பரிமாற்றங்கள் இல்லாமல்
கண்களாலே குறுஞ்செய்தி அனுப்பிய
எங்கள் காதலுக்கு கோடை மழை...

மழைச் சாரலில்
நான் ஓரமாய் ஒதுங்க
என் நிழலென
அவளும் என்னருகில் பதுங்க...

சேய் காக்கும் தாயென
விழி காக்கும் இமையாய்
என் பின்னால் வைத்தேன் அவளை
நானும் மாறினேன்
மழை தடுக்கும் தடுப்பாய்...

அவளோ என்னை நனைத்தால்
காதல் பார்வை சாரலில்...
அவள் என் பின்னால் பதுங்கிய நொடியில்
என் இதயம் முதுகுப் பகுதியில்
துடிக்கக் கேட்டேன்...

புத்தகம் கொடுக்கும் சாக்கினில்
என் இதயக் கடிதத்தையும்
கொடுத்தேன் அவளிடம்...

வாங்க மறுக்கும் பட்சத்தில்
செத்து விடும் சாக்கினில்
என்னை விட்டு வெளியேறிய என்னிதயம்
வெட்கப்புன்னகை பூத்து
அவள் வாங்கிய அந்த நொடியில்,
இதயம் மழையில் குதுகளிக்கின்றது...

சம்மதமா என்று நான் தலையாட்ட
என் கரம் கிள்ளி
சரி என்று சொன்ன நொடி
உயிர் ரெண்டும் வெளியேறி
மழையில் ஆடியது கை கோர்த்து...

இப்பொழுது மழை பெய்ந்து ஓய்ந்தாலும்
அந்த நாளின் பசுமை மட்டும்
காய மறுக்கின்றது
எங்கள் காதல் நினைவுச் சாரலில்....

கத்தி

கல்லூரிக்குள்
கத்தியுடன் திரிந்த என்னிடம்
காதலைத் தந்து
கவிதை எழுத வைத்தாயடி...
இன்று கவிதைகளையே கத்தியாக்கி
நம் காதலை
வெட்டி எறியச் சொல்கிறாய்...

எனைப் பிரிந்து

காதலிக்கும் காலங்களில்
சந்தித்து விடைபெறும் பொழுது
முத்தத்தினால் நனைத்திடுவாயடி
என் கன்னங்களை...
ஆனால் இன்றோ
கண்ணீரில் நனைக்க வைக்கிறாயடி
என் கன்னங்களை தினம் தினம்
நிரந்திரமாய் என்னைப் பிரிந்து...

மரியாதை

உன்னைப் பற்றி எழுதிய
கவிதைகளுக்கு கிடைக்கும்
புகழ்ச்சி வார்த்தைகள் எண்ணுகையில்
கடவுளுக்கு கிடைக்கும் மரியாதை யாவும்
அவரை பூஜிக்கும் பூசாரிக்கு
கிடைப்பது போலல்லவா இருக்கிறது,....

கள்ளி

எனக்குத் தெரியாமல்
என் இதயம் திருடியே கள்ளியே...
எனக்கும் கற்றுக்கொடு
இதயம் திருடுவதற்கு,
உன் இதயம் திருட...

உன் பிரிவில்

எல்லையில்லா வானம்
என் வாழ்க்கை.
வியாப்பித்துள்ள நீல நிறம்
நம் காதல்
வெண் மழை மேகங்கள் யாவும்
உன் பிரிவில் நான் காணும்
கண்ணீர்த் துளிகள்....

பறிபோனது

உன்னைப் பார்த்ததும்
பறிபோனது
என் இதயம்
மட்டும் இல்லையடி அன்பே
என் நிம்மதியும் தான்...

காத்திருப்பு

காதலைச் சொல்லிவிட்டு
பதிலுக்காக காத்திருப்பது
ஒரு ரணமான இன்பச் சுகம்...
அத்தகைய காத்திருப்புக்காக
காத்திருக்கிறேன்...
உன்னிடம் சொல்ல
என் காதலோடு....

கொடியது

உன்னோடு வாழ்ந்த
நிஜங்களை விட
கொடியது பெண்ணே...
நீயின்றி என்னை வாழவைக்கும்
உந்தன் நினைவுகள்....

தண்டனை

கொலை செய்தவனுக்கு தானடி
ஆயுள் தண்டனை - ஆனால்
சிரிப்பினால் கொல்லும் - உனக்காக
நானல்லவா அனுபவிக்கிறேன்
காதலில் ஆயுள் தண்டனை....

என் காதலில்

விடுகதையகிப் போன
என் காதலில்
ஒளி இல்லாத நெருப்பில்
தினம் தினம்
உருகிக் கொண்டிருக்கும்
மெழுகுவர்த்தி நான்....

நான்

நான் ஒரு கோமாளிக் கண்ணாடி
என் முன்னாள் நிற்பவர்களின்
மனதின் கவலைகளை நீக்கி
முகத்தில் சிரிப்பினை மட்டுமே
காட்டிக்கொண்டிருப்பேன்...

உன் திருமணம்

எனக்கென பிறந்த
என்னவளைப் பாருங்கள் என்று
இறுமாப்புடன் மார்தட்டிய என்னை
உன் மௌனம் என்னும் உளியினால்
நெஞ்சில் அல்லாமல்
முதுகில் அல்லவா குத்திவிட்டாய்
உன் திருமண நாளில்....

கேள்விக்குறியாக

என் வார்த்தைகளாய்
என்னுடன் விளையாடிக் கொண்டிருந்த
என் கவிதை - இன்று
வார்த்தை மாறிப் போன விந்தை என்ன?
இதை பிழையென்று சொல்வதா - என்
வார்த்தை விதி என்று என்னவா?
பிழையாக நிற்கிறேன் தனியாக
ஒரு கேள்விக்குறியாக...

என் வலி

என் இதயத்தின் பிம்பம் நீ.
என்னை விட்டுப் போன
ஒவ்வொரு நொடிகளுமே
நெருப்பில் வெந்த இதயத்தில்
திராவகம் ஊறிய வேதனையடி
என்னுள்ளே...

காதலிக்கும் போது
உன் அன்பினை, ஆசையினை
விருப்பத்தினை, காதலினை
எதிர்பார்ப்பினை
சொல்லும் போதெல்லாம்
புலம்பலை தானடி நினைத்தேன்..
கேட்பதை போல இருந்தேன் - உன்
மனதினை முழுமையாக
புரிந்து கொள்ள மறந்தேன்...

அதனால் தான் எனவோ
இன்று என்னை புலம்பலில் விட்டுவிட்டு
அதனை கேட்கக் கூடாத தூரத்தில்
வாழ்கிராயடி அன்பே....

ஒரே இடத்தினில் அடிக்கடி
அடி விழுகையில் மரத்து போகுமடி.
ஆனால் உன் பிரிவால்
ஒவ்வொரு நொடிகளுமே
ஒவ்வொரு அடியென - என் மனதினை
ரணமாக்கிக் கொண்டே செல்கிறது...

நாம் ஒன்றாய் இருந்த
நாட்கள் தானடி - இப்பொழுது
என் இதயத் துடிப்பாய்
துடித்துக் கொண்டிருக்கிறது....

என் வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முதுமை வேண்டாமடி செல்லமே!
தனிமையும், உன் நினைவுகளுமே
என்னை மரண வாசலை நோக்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
அழைத்துச் செல்கிரதடி - உன்
பிரிவினால் என் மனதினை
முதுமையடையச் செய்து.......

அவளின் நினைவுகளுடனே

கை கோர்த்து நடந்து சென்ற
பாதையில் பதிந்த
இரு ஜோடி பாதச் சுவடுகளில்
இப்பொழுது ஒரு ஜோடி மட்டும் தனியே...

எதிர்கால கனவுகளில்
மூழ்கிக் கிடந்த
இரண்டு இதயங்களில்,
ஒன்று மட்டும் கரையினில்...

வாழ்க்கை என்னும்
கண்ணாம்மூச்சி ஆட்டத்தில்
நிரந்தரமாய் ஒளிந்துகொண்ட
உன்னை கண்டுபிடிக்க முடியாத
குழந்தையின் தவிப்பினில்....

நித்தம் நித்தம்
காதல் நினைவுகளிலே
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும்
இதயங்களில் ஒன்று இயங்காமல்
மற்றொன்று இயங்க வழிதெரியாமல்
நீங்காத வலியோடு...

அவளின் நினைவுகளை
மறக்க நினைக்கும்
என் நினைவுகளை,
மறந்து நகர்ந்து கொண்டிருக்கிறது
என் வாழ்க்கை
என்றும் அவளின் நினைவுகளுடனே....

சீக்கரம் சொல்லிவிடு

உன் பதிலுக்காக
காத்திருக்கிறேன்
கண்களில் கண்ணீருடன்...
சீக்கரம் சொல்லிவிடு பெண்ணே
என் கண்ணீரில்
என்னுயிர் கரைந்திடும் முன்னே...

சொல்லாதே பெண்ணே

சொல்லாதே பெண்ணே
என்னைப் பிடிக்கவில்லை என்று
உனக்கு பிடித்ததெல்லாம்
எனக்கும் பிடிக்கும் பொழுது,
உனக்குப் பிடிக்காத
என்னையே எனக்குப் பிடிக்காமல்
போய்விடுமடி

வேதனை

பிரசவத்தில்
தாய் அனுபவிக்கும் வேதனையை
நொடிக்கொரு முறை
அனுபவிக்கிறேன் நான்
என் இதயம்
அவளது நினைவுகளை
பிரசவிக்கும் பொழுது....

ஈர்ப்பு

எத்துணைக் கவிதைகள்
அன்பே உன்னை வருணித்து...
எதற்குமே மசியவில்லையே நீ
"குண்டூஸ்" என்று சொல்கையில்
கிறங்கிடுவதைப் போலே என்று
நொந்து கொண்டேன் - பிறகு
தெரிந்து கொண்டேன்.
வருணிக்கும் வார்த்தையில் இல்லை
வசிகரிக்கும் காதலின் வார்த்தைகளில்
ஈர்ப்பு உள்ளதென்று...

பட்டிமன்றம்

பட்டிமன்றம் வைத்திட எண்ணி
நடுவரைத் தேடுகிறேன்...
வண்ணத்துப் பூச்சியின்
சிறகடிப்பு,
உன் இமைகளின் படபடப்பு,
இரண்டிலும் அழகு
எதுவென்று தெரிந்திட வேண்டி...

வேறென்ன சிறந்தது

ஒன்றை விட மற்றொன்று
சிறந்தது உண்டாம் உலகில்.
எனக்கு மட்டும்
பொய்த்து போகிறது சில இடத்தில்,
காதலில் வேறென்ன வார்த்தை
இருந்துவிடப் போகிறது
என்னவள் என்னைக் கூப்பிடும்
"டேய் புருஷா" என்பதற்கு...

கோபம்

காதலியானவளை யாரும்
கோபப்படுத்தி பார்க்க மாட்டார்கள்
என்னைத் தவிர...
கோபத்தில் மட்டும் தானே
என் பெயரினை
என்னவள் உச்சரிக்கிறாள்...

சரியா? தவறா?

என்னில் கலந்திருக்கும்
என் இதயத்தில் ஒளிந்திருப்பவளே..
நில்லாமல் துடிக்கும் என்னிதயம்
உன் பெயரினை சொல்லித் துடிப்பது
உனக்குத் தெரியவில்லையா...

உன்னைப் பார்த்த நாள் முதல்
நான் படும் அவஸ்தைகளை
உனக்கெப்படிச் சொல்லுவேன்...
நினைவில் ஒவ்வொரு நொடிகளையும்
நரகமாய் கழிப்பது உனக்கெப்படி புரியும்...

மண்ணிலே நீர் விழுந்தால்
மழையென்று மண்ணிற்குத் தெரியும்...
மேனியில் நீர் துளிர்த்தால்
பனியென்று மலருக்குப் புரியும்....
என் மனதில் உன் பார்வை விழ
காதலென்று தெரியவில்லை...

ஆரம்பத்தில் நேரமே கரையாமல்
அலுத்துக் கொண்ட நாட்கள் எத்தனையோ.
இன்றோ உன்னை நினைக்க ஆரம்பித்தால்
பாலையில் பெய்த மழையாய்
கரைகிறது என் நேரம்...

சொந்தமே இல்லையென்று பலர்
எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்,
உன்னை எந்தன் சொந்தமாக
எண்ண ஆரம்பித்த நாள் முதல்,
நெருங்கிய சொந்தங்களைக் கூட
அந்நியமாய் பார்க்கிறது கண்கள்...

என்னெதிரே என்னிடம்
யார் வந்து பேசினாலும்,
நீயே பேசுவதாய் பிரம்மை...

உன்னைக் காண்கிறேனோ இல்லையோ
உன் வீட்டினைக் கடக்கும் வேளையில்
மனதில் பொங்கும் மகிழ்ச்சிக்கு
வேறொன்றும் இவ்வுலகில் இணையில்லை...

வானில் மேகங்கள் ஒன்றையொன்று
துரத்திச் செல்லும் வேளையில்,
அதிலே மேகத்திற்க்குப் பதில்,
நீயும் நானுமாய் தோன்றும்...

இத்துணை நாட்கள் வாழ்வில் இல்லா
புதுமையான மாற்றங்கள் யாவும்
இப்பொழுது மட்டும் எப்படி?

மகிழ்ச்சியாய் சுற்றித் திரிந்த
நாட்கள் தான் போனதெங்கே?

நிலையிலே இல்லாத என் மனம்
போன இடம் தானெங்கே?

என் மனதில் எழும் வினாக்களுக்கு
விடையளி பெண்ணே - அப்படியே
நானுன்னை நினைத்து வாழ்வது
சரியா? தவறா? என்றும்...

சொல்லிவிட்டன உன் காதலை

கள்ளத்தன பார்வைகளும்,
கண்களில் குறுகுறுக்கும் புன்னகையும்,
வந்துவிட்டதை தெரிவித்திடும் வளயலோசையும்,
கவனிப்புகளைக் காட்டிடும் செருமல்களும்,
ஜீவன் தெரியா நேரத் தேடல்களும்,
நோய்வாய்ப்பட்ட நாட்களின் விசாரணைகளும்,
நாட்கணக்கில் முகம்காணா தவிப்புகளும்,
என்னெதிரே பேசப்படும் படபட வார்த்தைகளும்,
நீ சொல்லிடும் முன்னரே
சொல்லிவிட்டன அன்பே என்னிடம்
உன் காதலை...

காதல் நாடகம்

வெகுநாட்களாய் நடைபெற்ற
அழகிய நாடகம்...
நானும் நீயும் மட்டும் நடிகர்கள் - ஆனால்
ஏற்க வேண்டிய பாத்திரத்தை மறைத்து
நண்பர்களாய்...

உனது அழகிய தோழி நடிப்பிற்கு
நம்மைச் சார்ந்தவர்களே
கருத்து கூறினார் காதலென்று...
இல்லை இல்லை என்று
உன் காதலை மல்லிகைப் பூவாய்
பொத்தி வைத்தாய்
யாரும் அறியக் கூடாதென்று...

காற்றும் காதலும் ஒன்றென்று
அறியவில்லையாடி நீ.
பூவின் வாசமும், காதலின் வெளிப்பாடும்
மறைத்தாலும் மறையாது என்பது
எல்லாருக்கும் தெரியும்
பூ விற்பனை செய்பவரையும்
காதலிப்பவரையும் தவிர....

ஆனாலும் நீ செய்யும்
ஒவ்வொரு விசயங்களும்
உன்னிடம் இருந்து கொண்டு,
உனக்கெதிராய் எனக்காய்
செயல்பட என்ன செய்வேன்...

இன்னும் எத்தனை நாட்களுக்கு தாண்டி
பொத்தி வைத்து மறைக்கப் போகிறாய்
மல்லிகைப் பூவாய் மணக்கும் நம் காதலை...

அப்படித்தானடி அன்றொருநாள்
நீ அழைக்கும் பொழுது
வெகுநேரம் சிக்கவில்லை உன்னிடம்
என் எண்கள்...

வெளியில் செல்ல, விட்டுச் சொல்லும்
குழந்தையின் ஏக்கத்தின் கோபத்தை
உன்னிடம் கண்டேனடி அன்று...

கிடைத்ததும் கோபப்பட்டாய்
யார் என்ன வென்று கேட்டாய்...
நானும் நெருங்கிய தொழிஎனச் சொல்லி
மேலும் நெய்யூற்ற....

இத்தனை நாள் மறைத்து வைத்திருந்து,
முதன் முறையாய் நீ கூறாமல்
தெரிந்து கொண்டேனடி
உன் கோபத்தினை அல்ல
உன் காதலை...

துடிப்பு

இதயத்தின் படபடப்பு
இதயத் துடிப்பாய்..
ஆனால் எனக்கு மட்டும்
உன் நினைவுகள் யாவும்
நொடிக்கொரு காட்சியாய்
தோன்றி மறையும் சப்தமாய்...

இனிமை

குழலினிது யாழினிது அதைவிட
மழலை சொல் தானினிது என்பர்
காதல் மொழி கேளாதோர்...

மௌனம்

உலகம் என்னை ஏசிய
ஆயிரம் வார்த்தைகள் கூட
என் மனதை
ரணம் கொள்ளச் செய்யவில்லையடி
உன் மௌனத்தின்
வலியைப் போல....

தோல்வி

இம்முறையும்
தோற்றுவிடக் கூடாது என
என் இதயத்தோடு
சண்டையிட்டுத் தானடி வந்தேன்
அன்பே உன்னிடம் காதலைச் சொல்ல...
வழக்கம் போலவே
உன் பார்வை ஜெயத்திட
என் இதயம் தோற்றுவிட்டது...

சிம்மாசனம்

உன்னை
எனது இதய சிம்மாசனத்தில்
அமரவிட்டது யாரடி...
தெளிவான நினைவுகளாய்
இதயம் நோக்கி வந்திடும்
என் உதிரத்தை,
இதயத்துள் நுழைந்தபிறகு,
உனது நினைவுகளை ஏற்றிச்
சுமக்க வைக்கிறாயடி...

மேகம்

தன்னையும் கலைத்திட
கெஞ்சுகிறது மேகம் காற்றிடம்...
உன் கை விரல்கள்
என் தலை கோதி
கேசத்தை கலைப்பதைப் பார்த்து...

பழமொழி

பழமொழிகளும் சிலநேரம்
ஆண்களிடம் தோற்றுவிடுகிறது..
புயலுக்குப் பின் அமைதியாம்...
ஆண்களின் மனதில்
புயல் வீசிடக் காரணமே
பெண்களின்
அமைதியான புன்னகை தானே...

நட்பு

ஒரு வரியில்
கவிதை கேட்டார்கள்
நான் நட்பு என்றேன்.
கவிதை என்றால்
பொய்கள் என்றார்கள்..
பொய்யான வார்த்தைகள் நடுவில்
மெய்யான உணர்ச்சிகள் போல்
உயிர்த்தெழும் உண்மையே
கவிதையென்றேன்...
நம் நட்பினைப் போல...

நட்பு

வாழ்க்கை வியாபாரத்தில்
புன்னகை எனும்
சிறுமுதலீட்டில்
பெரிய லாபம்
உன் நட்பு...

கல்லூரி இறுதிநாள் கவிதை..

சப்தம் இல்லாமல் புன்னகை பூத்து,
சப்தமாய் கண்ணீர் வடித்து,
ஆளுக்கொரு வார்த்தையாகி,
வாக்கியம் அமைத்திடும் வேளையில்,
ஒரு சந்திப் பிழை - பிரிவு.

கண்ணீர்

உன் நினைவு குறுவாள்
என்நெஞ்சில் குத்தியதும்,
குத்திய இடத்தினில் அல்லாமல்
கண்களில் அல்லவா வழிகிறது
குருதியாய் கண்ணீர்....

குருடன்

குருடனாய் பிறந்திருந்தால்
பார்வை கண்டு கவலையில்லை...
பாதியிலே பறிபோன பார்வையில்
வாழ்க்கை வெறுமையாகிடும்
நிலையில் தானடி காதலியே,
உன் காதலில் வாழ்வைக் கண்ட
நானும்...

அழகில்லை

உன்னை அழைத்திட
மிகச் சிறந்த வார்த்தைகளை
தேடி அலைந்தும் பலனில்லை அன்பே...
எந்தவொரு வார்த்தையும் அழகில்லை
உன் பெயரை போல...

பெயர்

என் பெயரைச் சொல்லி கூப்பிட்டதும்
குரல் வந்த திசை நோக்கி
நான் திரும்பியதை விட
நீ திரும்பியது தானடி அதிகம்...

என்னிதயம்

உன் கூரிய பார்வை உளியால்
உருவமில்லா கல்லான என்னை
சிலைஎனச் செதுக்கினாய்...
உன் காதல் கை கூடிருந்தால்
முழுச் சிலையாய் உருபெற்றுருப்பேன்...
கிடைக்கப் பெறா நிலையில்,
சேதமடைந்த சிலையாய்,
கோவில் சேரா சிற்பமாய்,
உன் நினைவு அம்மிக் கல்லில்
அரைபடும் பொருளாய்
என்னிதையம் சிக்கிடுதே....

தங்கை

எனக்கு
தங்கை பிறந்து உள்ளானாம்
என்னடா இந்த வயதில
எனக் குழம்பாதிர்...
என் தாயாக எண்ணியவள்
இன்று குழந்தை பெற்றுவிட்டாள்...

காதல்

அற்பமான விசயங்களையும்
அதி முக்கித்துவமாய் காட்டும்
மாயக் கண்ணாடி
காதல்...

வளையல்

இனிவரும் ஜென்மங்களிலாவது
உன் கை வளையல்களாய்
பிறப்பெடுக்க வேண்டும் பெண்ணே
பொழுதேனும் உன் கைகளைப் பற்றி
சில்மிஷம் செய்து சிணுங்கிட...

பொம்மையும் நானும்

பொம்மை.
குழந்தைகளுக்கு உயிர்..
ஏன் பிடிக்கும்
என்ற காரணம் இல்லாமலே.
கொஞ்சிக் குலாவிடும்
கூடி மகிழ்ந்திடும்..
சில நாட்களில்,
தெரியாத காரணத்தால்
தூக்கி எறிந்து விடுமடி.
பின் சீண்டுவதும் இல்லை...

இன்று இந்நிலையில் தானடி
ஏன் எதற்கு எனத் தெரியாமல்
உன்னால் தூக்கி எறியப்பட்ட
நானும் என் காதலும்...
நீ மட்டும் எனக்கு குழந்தையாய்...

மொழிப் பெயர்ப்பாளர்

நம் இதயம் இரண்டும்
பேசிக்கொள்ளும் மொழிக்கு,
மொழிப்பெயர்ப்பாளர் வேலை
நம் கண்களுக்கு...

மறந்துவிட்டாய்

என்னை நேசிக்க தெரிந்த நீ
வாசிக்க மறந்து விட்டாயடி
என் நெஞ்சில் செதுக்கிய
உந்தன் நினைவுகளை...

தோழியா? காதலியா?

நீ சொன்னதெல்லாம்
நான் செய்து முடித்திடும் பொழுது
பாராட்டினாய் என் தோழியாய்.
நீ சொல்லாத
ஒன்றினையும் செய்துவிட்டேன்...
உன்னை காதலிக்கும் செயலை.
தோழியாக தண்டிப்பாயா? இல்லை
காதலியாய் வாழ்வில் இனிப்பாயா?

வெளிக்கொனரடி

உனக்குள் திறமை உள்ளது..
இன்னும் எத்தனயோ
திறமை மறைந்து இருக்கலாம்,
தொடர்ந்து எழுது என்று
என் கவிதையை படித்துவிட்டு
உற்சாக மூட்டி
வெளிக் கொணர்ந்ததை போல்
என்னுள்ளே புதைத்துள்ள
என் காதலையும்
வெளிக் கொண்டு வந்துவிடடி...

குடையும் கேள்வி

முத்தமிட்ட பிறகும்
உன் நினைவாய்
கொஞ்ச நேரம் என்னோடு
ஒட்டிக் கொண்டிருக்கட்டும் என்று
என் எச்சில் பட்ட
இடத்தையும் துடைத்திட மாட்டாயே...
இந்நொடி வரையிலும்
என் நினைவுகள் சிறிதேனும்
உன்னில் ஒட்டியுள்ளதா? என்ற
கேள்வு என்னைக் குடைகிறது அன்பே...

காதல் பூகம்பம்

உன்னால் என் நெஞ்சில்
காதல் பூகம்பம்...
சேதாரமாய் -
தூக்கம் தொலைத்த
நிம்மதியற்ற இரவுகளில்
உன் நினைவுகள்...
ஆதாரமாய் -
பொறுமையே கண்டிராத
மனமோ உன் வருகைக்காக
மணிக்கணக்காய்
காத்துக் கிடத்தல்...

வலியும், வேதனையும்

நாம் இணைந்திருந்த நாட்களின்
காதலின் இனிமைகளை
சொல்லிட எண்ணுகின்ற வேளையில்,
உன் பிரிவால் நீயில்லாமல்
வெற்றிடமாகிய என் இதயத்தை
நினைவுகளின் கவ்விக் கொள்ள,
வலிகளும் வேதனைகளுமே
என் வரிகளில் மேலோங்கிவிடுகிறது...

சிகரெட்

சிகரெட்டும் ஆண் தான் போலும்.
உதட்டோடு உறவாடி
தூக்கி வீசப்படும் பொழுது

சித்திரவதை

உன்னை
என் குழந்தையாய்
என் நெஞ்சில் சுமந்தேனடி
இதுநாள் வரையிலும்...
இன்றோ என்னெதிரில்
கைகோர்த்து கணவனோடு,
நெஞ்சில் அணைத்த குழந்தையோடு....
இதற்காகவாவடி காதலித்தோம்.
உனைப் பார்த்த இந்நொடியே
உயிர் துறக்கலாமடி.
மரணம் வரையிலும்
இக்காட்சி அணுவணுவாய்
என்னைச் சித்திரவதை செய்வதை
தடுத்திட...

பேருந்து பயணம்

எப்பொழுதும் நம்மை
முன்னோக்கி அழைத்திடும் பயணம்.
எத்தனையோ முறை
நம்மை ஒன்றாய் அருகருகே
அமரவைத்த தருணம்...
இன்று நான் மட்டும்
தனியே பயணம்.
நம் நினைவுகளுடன்
பின்னோக்கி...

என் நிலை

உன் நிழலைத் தீண்டியதற்கே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
குதித்தவன் நான்..
இன்று என் கையில்
உன் கரங்கள் பற்றிட கிடைக்க
சொல்லவா வேண்டும்
என் நிலையயை...

காதல் மரம்

காதல் விதையை
என் நெஞ்சில் புதைத்து,
உன் பார்வையில் தினம்
உரமிட்டு வளர்த்துச் சென்றாய்.

உன் பிரிவில்
விட்டுப் போன மரத்தைப்
பட்டுப் போக விட
மனம் இல்லையடி அன்பே...

நீ இல்லாத நெஞ்சில்
நீ இட்ட காதலாது
வளரட்டும் நிரந்தரமாய் என்று
வளர்க்கிறேன் நாளொரு வண்ணமாய்
என் கண்ணீர் கொண்டு...

நடிகன்

உன்னிடம்
என் காதலைச் சொல்லி
உன் காதலன்
ஆகிறேனோ இல்லையோ
நல்ல நடிகன் ஆகிவிட்டேனடி.
இரவிலும், தனிமையிலும்
என்னை வாட்டி வதைக்கும்
காதலை உன்னுடன் சொல்லவந்த
ஒவ்வொரு முறையும்
காதலை மறைத்தபடியே
உன்னிடம்
சிரித்துப் பேசுகையிலே ...

ஆகஸ்ட் 23

இறந்து போன சென்ற வருடத்தில்
உனக்கு நிச்சயதார்த்தம்..
நிச்சயமாய் கனவிலும்
நான் எதிர்ப்பார்த்திடா
அபத்தம்...

எதிர் வினை

ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்.
நியூட்டனின் மூன்றாம் விதிக்கு
மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
என் காதலே...
அவளின் காதலில் அனுபவித்த
எண்ணிலடங்கா
மகிழ்ச்சிகளுக்கு தான்
இப்பொழுது அனுபவித்து வருகிறேன்
அளவிலடங்கா துன்பத்தினை
அவளின் பிரிவில்...

ஜென்மம்

உனக்கு ஜென்மை ஒன்று
போதுமென்று சொல்லியதால்
நீ என்னை சுயநலவாதி என்று
எண்ணி விடாதே பெண்ணே.
நான் வாழப்போகும்
ஜென்மம் ஏழும்
உனைப் பார்த்த நிமிடம்
எனக்கில்லை என்றாகிவிட்டதால் ,
உன்னை ஒரு ஜென்மம் மட்டும்
வாழச் சொல்கிறேனடி
உனைக் காதலிக்க...

மழை

யாரின் மனதை கலைப்பதற்காக
இப்படி அழுகிறாய் மேகமே..
கண்ணீர்த் துளிகளாய்
மழை..

இழப்பு

ஒன்றை இழந்து தான்
மற்றொன்றை பெறவேண்டுமாம்
உண்மை தான் போலும்...
காதலைப் பெற
என் நிம்மதியை
இழக்க வேண்டியாயிற்றே...

உன் நினைவுகள்

இன்றோடு உன் நினைவுகளை
களைத்து எறிந்துவிடலாமேன்று தானடி
கவிதையாய் எழுதுகிறேன்..
ஆனாலும் துரியோதனன் உரித்த
துகிலாகத்தானடி நீள்கிறது
முடிவில்லா நம் காதலின்
நினைவலையில்...

உயிர் தந்துவிடு

உன் உளியின் பார்வையால்
காதலென்னும் சிலையை
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னில் செதுக்கினாயடி
அன்பில், இதயம் தந்த நீ
உன் காதலில் உயிர் தந்துவிடடி...

உனக்கெப்படி தெரியும்

தினம் தினம்
கவிதை சொல்லக் கேட்டாய்
கவிதைத் தொகுப்பாய் உன்னில்,
உனது ஒவ்வொரு செய்கைகளைத் திருடி
வார்த்தையாக்கி கூறுவது
உனக்கெப்படி தெரியும்...

அகராதி

என் வாழ்க்கையின்
விளக்கம் அறிந்து கொள்ள
எனக்கான அகராதி..
நீ தானடி...

பிரிவு

ரொம்பவும்
கர்வம் கொள்ளாதே காலமே!
என் வாழ்க்கையிலிருந்து
அவளது நிஜத்தை தான்
பிரிக்க முடிந்தது...
அவளின் நினைவுகளை பிரிப்பது
என்னாளும், எந்நாளும் இயலாத ஒன்றே...

கை

ரோஜாவைப் பற்றினேன்
முட்கள் குத்தவில்லை
காரணம் தெரிந்தது
உன் கை என்று...

Saturday 25 December, 2010

என் காதல்

வார்த்தைகளில் சொல்ல வலிமையில்லை
என் கற்பனைகளுக்கு...
நிஜத்தின் பதிவுகளைத் தான்
மொழிமாற்றப்பட்டு கவிதைகளாய்....
என் காதல்...

கைப்பேசி

சில நேரம்
உன் கைப்பேசியாய்
மாறிடத் தோன்றுகிறது...
உனது பெரும்பாலான
பேச்சுக்களையும்,
வார்த்தைகளையும்,
கைச்சூட்டின் அணைப்பையும்
நானும் அனுபவித்திட வேண்டி..

அலைபேசி

இனிமேல் அதிகமாய்
அலைபேசியில் பேசிடாதே..
உன் கொஞ்சல் பேச்சும்,
கலகல சிரிப்பும்,
உதட்டு முத்தமும்,
காதலிக்க வைத்திடும்
உனது அலைபேசியினையும்..
எந்திரனும் காதலிக்கும்
காலமால்லவோ இது...

நட்பா? காதலா?

கண்கள் காணும் காட்சிக்கு
உதடுகள் பொய்யென்னும் சாயம்
பூசிக்கொள்கிறது - இனிமேல்
உன் கண்களிடமே
கேட்டுக் கொள்கிறேன் பெண்ணே..
நீ பார்க்கும் பார்வை
நட்பா? காதலா? என்று...

முரண்

பூவெல்லாம் காய்ந்து கனியுமாம்.
நீ மட்டும் முரணில்லையடி..
எனக்காய் பூத்து
பிரிவினில் காய்ந்து,
கூடலின் கனிகிறாய்...

தீண்டல்

ஒருமுறை தேனெடுத்த பின்
மறுமுறை தீண்டப்படாதாம் மலர்.
உன் இதழ்கள் மட்டும் எப்படியடி
தீண்டத் தூண்டுகிறது
மீண்டும் மீண்டும்..

சிரிப்பு

பூக்கள் சிரிக்குமாம்
நான் நம்பவில்லையடி.
இப்பொழுது நம்புகிறேன்
பூக்களுக்குனடுவில்
உன் புன்னகைப் பார்த்து...

திட்டம்

பூந்தோட்டம் செல்லாதே இனிமேல்...
பூக்களும் உன்மேல் ஆசை கொண்டு
உன்னைத் தலைவியாய் மாற்றி
தன் கூட்டத்தோடே வைத்துக்கொள்ள
திட்டமிடுகின்றனவாம்...

கேள்வி

கடைசியாய்
கேட்டே விட்டன தேனிக்கள்..
உன் மலரில் மட்டும்
எப்படி தினமும் தேனுருகிறது...
தினம் நீ பருகிட மட்டும்...

ஏமாற்றம்

கோடைகால வெப்பத்தில்
மலர்கள் யாவும் வாடிட
தேனெடுக்க வழியின்றி
ஆயாசமாய்த் திரிகையில்,
பெரியதொரு தேன்கிண்ண மலரென
உன் இதழ்களை மொய்த்திட
எண்ணி அருகில் வருகையில்,
உன் இதழ்களை
நான் சுவைப்பதைப் பார்த்து
ஏமாந்து தான் போகிறது தேனீக்களும்...

வண்ணத்துப்பூச்சி

நான் செல்லும் வழியெங்கும்
ஒரு வண்ணத்துப் பூச்சியினையும்
காணவில்லையென அப்பாவியாய்
கேட்கிறாய் எல்லாம் செய்துவிட்டு...
உன்னிமைகள் படபடப்பைக் கண்டு
நீ பூப்படைந்த நாள்முதலே
இனியும் இங்கிருத்தல்
அழகில்லையென நாணி
நீ உலவும் இடம்விடுத்து
இடம் பெயர்ந்து விட்டதே...

Friday 24 December, 2010

உன் அழகு

நேற்று நீ
கோவிலுக்குச் சென்றாயா என
என் காதலியை வினவினேன்...
ஆமாம். நீ எப்படி அறிந்தாயென
கேள்வியை திருப்பி வைத்தாள்...
உன் அழகில் மயங்கி
கர்வம் ஒழித்து,
சிற்ப்பங்கள் ஏதுமின்றி
வெறிச்சோடிய கோவிலைக்
கண்டதும் தாண்டி கேட்டேன்...

நீயும் சிலையும்

கோவில் சிற்பமும்
நீயும் ஓன்றுதானடி...
அழகில் மட்டுமில்லை -
என் கோரிக்கைகளுக்கு
செவி சாய்த்திடா
கல் மனதிலும்...

தியானம்

கோவிலில் தியானம்
செய்யாதே என்றால்
எங்கே அன்பே கேட்கிறாய்...
இப்பொழுது பாரடி
உன்னை சிலையென எண்ணி
அலங்கரிக்க தொடங்கிவிட்டனர்...

வேண்டுதல்

கோவில் வந்து வேண்டியதில்
உனது வேண்டுதல்
பழித்ததோ இல்லையோ?
உனது நெற்றியில்
ஏற வேண்டுமென்ற
குங்குமத்தின் வேண்டுதல்
ஈடேரிதான் விட்டது...

பிரகாரம்

வாழ்க்கையில் என்னைத் தான்
உன் பின்னால் சுற்றிட வைத்தாய் என்றால்
கோவிலினுள் சிலையாய் வந்த
பூத கணங்களையும் அல்லவா
உன் பின்னே சுற்ற செய்திட்டாய்
பிரகாரம் சுற்றும் பொழுது...

விளக்கு

நீ
விளக்கேற்றுகையில் மட்டும்
எல்லா விளக்குகளுமே,
அணைவது ஏனோ?
உனைக் கண்டதும்
உயிர் துறந்து
உன் ஏற்றலில் மீண்டும்
உயிர்த்தெழுந்து பிரகாசித்திடவா?

சிலை

கோவில் விட்டு வெளியே வந்து
காலனி மாட்டும் பொழுது தானடி
சிலையொன்று தான் என்னெதிரே
நடமாடுவதை எண்ணி வந்த
எனக்கு உரைத்தது நீ பெண்ணென்று...

Thursday 23 December, 2010

பெயர்

இனிமேலும் அர்ச்சனை செய்திட
நீ செல்லாதடி சகியே...
உன் உதடுகளில்
உன் பெயரைச் சொன்னதும்,
இப்பொழுதெல்லாம் yaraith
உன் பெயரைத் தான்
மந்திரமாய் ஜெபிக்கிறார் அர்ச்சகரும்...

படைப்பு

கோவில் சிற்ப்பங்கள் யாவும்
உன் தந்தையை தேடுகின்றன...
உன்னைப் போலவே அவைகளையும்
அழகாய் படைத்திட வேண்டி..

ஆராதனை

கர்ப்பக்கிரகம் அருகில் சென்று
தரிசனம் செய்யாதே என்று
எத்தனை முறை தாண்டி சொல்வது...
இப்பொழுது பார் - அர்ச்சகர்
உனக்கு தீபாராதனை காட்டுகிறார்...

வாலி

எதிர்ப்பவரின் பலம் பாதி பெற்றிடும்
இராமாயண வாலியின்
ஜாதி போல தானடா நீயும்...
உன்னை நோக்கும் வேளையில்
என் தைரியம் நீ எடுத்து,
என்னைப் பார்க்கிறாய் - என்னை
மண்ணைப் பார்க்க வைத்து விட்டு...

Tuesday 21 December, 2010

சந்திப்பு

மாலை ஆறு மணி..
சந்திக்க வரச் சொன்னாள் தனியே...
நேரத்திற்கு வருவது அவளது வழக்கம்.
நேரத்தை விழுங்கி வருவது
என் பழக்கம்...

வந்த நொடி முதல்
எனைப் பார்த்துக் காத்திருப்பாள்.
நொடிகளையும் நிமிடமாய் நகர
விரட்டிக் கொண்டிருப்பாள்...

இதழ்கள் என்னை கடிந்து கொண்டும்,
என் காதல் அவள் பற்களிடையே
சிக்கிக் கொண்டிருக்கும்...

என் சாயல் தலை காண
அல்லியாய் அவள் முகம் பூத்திருக்கும்..
இல்லையென்ற பின் ஏமாற்றத்தில்
முகத்தில் கடுகு, எள் வெடித்திருக்கும்..

காத்திருக்கும் நொடிகள்
நகர்வதைக் காட்டிலும் - என்
மேலுள்ள கோவம் கூடிருக்கும்.

கீழ்வானம் சிவந்ததைக் கூட - அவள்
கன்னம் சிவந்து உணர்த்திடும்...
சினத்தின் பெருமூச்சின் வெப்பத்தில்
பனியும் அடி ஒன்று
அவளைச் சுற்றியே பொழியும்...

நான் மெல்ல தலை காட்ட
என்னவள் கோபத்தின் எல்லை கண்டு
சூரியனும் இருளில் மறைந்து கொள்ள,
என்ன, ஏதென்று நொடிகள் ஸ்தம்பிக்க,
வந்ததும் கத்தித் தீர்த்தாள் சினத்தை
பெய்து தீர்த்திடும் மேகமாய்...

காத்திருந்த காலத்தையும்
சேர்த்தே காய்ச்சி எடுப்பாள்...

சினம் அமர்த்த கெஞ்சிடுவேன்.
அவளோ மிஞ்சிடுவாள்.

மிஞ்சியதும் முறைத்துக் கொள்வேன்.
என்மேல் தவறில்லா அப்பாவியாய்...
மிஞ்சிய என்னவள் இப்பொழுது
கெஞ்சலில் என்னை மிஞ்சிட,

மிச்ச மீதி நேரத்தையும்
உறைய வைத்திட கட்டிக் கொள்வாள்..
என் முகமேங்கிலும்
முத்தத்தால் நனைத்திடுவாள்..

இரவினைக் குளிர்விக்க வேண்டி
மெல்ல எட்டிப் பார்க்கும் நிலவும்
திரும்பப் போக வேண்டியதாயிற்று
எங்கள் கூடலின் குளுமை கண்டு...

தடை

மார்கழி இரவினை
உன்னோடு கழித்திட
வேண்டுகிறது என்னுடல்...
அவ்வாறு கழியுமென்றால்.
களியாட்ட வெப்பத்தில்,
கடுங்குளிரும் கோடையாகிப்
போகுமென எச்சரித்து
தடை போடுகிறது மனம்...

பஞ்ச பூதம்

பஞ்ச பூதங்கள்
எனக்கு மட்டும்
மூவிரண்டு பூதங்களாயின
காதலோடு..

பாராட்டு

உன் அசைவிலே
ஆயிரம் கவிதைகள் சொல்கிறாய்
ஒன்று ரெண்டாய்
கற்பனையில் கவி தேடும்
என்னைப் புகழ்கிறார்கள்...

காதல்

வார்த்தைகள் சுமந்த
சக்தியும் கூட இன்றி
நம் வாழ்க்கை
காதலில்...

நண்பன்

காரியத்திற்கு
இருப்பவன் அல்ல
என் கடைசி
காரியம் வரை இருப்பவன்...

Monday 20 December, 2010

இப்பவே கண்ண கட்டுதே

என்னைக் காணாத நிலைவந்தால்
என்ன செய்வாயென வினவினாள்.
பட்டினியாய் பசலை நோய் கண்டு
சருகாய் காய்ந்திடுவேன் என
எதிர்பார்த்திட்டாள் போலும்..
வழக்கம் போலவே நானிருப்பேன்
மூவேளை உணவையும் உண்டிடுவேன்
எனச் சொல்லித் தொலைய...

காதல் கண்களில் கோவத் தீப்பொறியிட
பேசாதே என் நிழலோடும் என
சினத்தில் திரும்பிக் கொண்டாளவள்..

நம் பாதம் பதித்த இடமெங்கிலும்
உனைத் தேடிப்பார்த்திடவும்,

கலங்காது கழனிஎங்கும் களைப்புறாமல்
தேடிட வேண்டிடும் கால்களுக்கும்,

உன் நினைவிலே எரிந்து கரையும்
என்னிதயம் பறைசாற்றிட வழிந்திடும்
கண்களுக்காகவும் உண்டிட
வேண்டுமென மொழிந்தேன்...

என் கூற்று மெய்யென நம்பி
கட்டிக் கொண்டு என்னை முழுமையாய்
ஆட்சி செய்தாள் காதல் மகாராணி

ஒரு சான் வயிற்றிக்கு என்னவெல்லாம்
கூற வேண்டியுள்ளதென எண்ணுகையில்,
அடுத்த கேள்விக்கு என்னவள் எத்தனிக்க
கண்ணைக் கட்டுகிறது எனக்கு..

ஆசை

நான் பெண்ணாக மாறிப்போனால்
எப்படி இருப்பேன் எனக் கேட்டேன்
எதிர் நிற்கும் காதலியிடம்...
அடப் போடா பைத்தியம்
இப்பொழுதும் நானாகத் தானடா
நீ வாழ்கிறாய் பிறகென்ன ஆசையென்று
தலை கொட்டிச் செல்கிறாள்...

அழகுக்கு அழகு

தான் தான் அழகென்றும்
அதனால் தான் நீ
சூடிக் கொண்டாய் என
கர்வக் களிப்பில் கெக்கரிக்கிறது
அன்பே ரோஜா...
அழகிற்கு அழகு
சேர்த்திட வேண்டித்தான்
நீ சூடியதெனத் தெரியாமல்...

பாவம்

உன் தலையில்
மல்லிகைப் பூவினைச் சூடியதும்,
ரொம்பவே கர்வப் பட்டு
பிதற்றுகிறது அன்பே
உன்னில் சேர்ந்துவிட்டதென...
விடியும் வரையிலான
நம் காதல் விளையாட்டில்
வெந்து, நசுங்கி, காய்ந்து
உயிர்விடப் போவது தெரியாமல்
- பாவம்...

பூக்களின் பரிசு

பூக்களைப் பரிசளித்து தான்
காதலைச் சொல்வார்களாம்...
பூக்களுக்கும் காதல் வந்து விடில்?
அஞ்சாதே கண்மணி...
உன்னை தான் நான்
இறுகக் கரம் பிடித்து
கட்டி அணைத்துள்ளேனே...

மரணம்

மரணமும்
என்னை அழைத்திட
தடுமாறித்தான் போகுமடி...
ஒரு நாள்
உன்னைப் பிரிந்ததற்க்கே
நான்பட்ட
அவஸ்தைகளை கண்டு...

தேடல்

தேடிக் கொண்டிருக்கிறேன்
காற்றின்றி வாழக்கூடும் இடத்தினை..
என்னைவிடவும் என்னவளை
அதிகம் சீண்டுவது - அந்தக்
களவாணிப் பயல் காற்று தானே...

Friday 17 December, 2010

நன்றி காதலா

என் மடியில் படுத்துக் கொண்டு
என் விரல்களில் சொடுக்கியபடியே
நன்றி சொன்னாள் என்னவள்...
ஏனென்று வினவிக் கேட்கையில்
என் மடியில் நீ படுத்துறங்கும் போது
உன் தலை கோதி, கன்னம் வருடி
நீ தூங்கும் அழகை இரசித்திடும்
ஒரு தாயின் நிலையை
தொட்டடைந்தேன்
காதலா...
தனிமையில் உன் மடியினில்
நானும் தலை சாய்த்திடுகையில்
காதலனின் கதகதப்பும்,
அன்பின் அரவணைப்புமாய்
ஒரு சேரக் கண்டேன் காதலியாய்...
நெஞ்சில் சுமந்த காதலுக்கும்
மனதில் சுமந்த மழலைக்கும்
உண்டான சுகத்தினை தந்தமைக்கு
தானென்று முத்தமிட்டாள்
கண்ணடித்தபடி...

பயணம்

ஆகாய விமானத்தில்
உன்னை அழைத்துச் செல்ல
ஆசையோடு வந்திட்டால்,
நீயோ என்மீது
யானை சவாரி செய்திட
கெஞ்சிக் கேட்கிறாய்...
அது சரி தான்
என் அணைப்பிலே ஆகாயத்தில்
மிதக்கும் உனக்கு முன்
விமானப் பயணம் எடுபடுமா?

போட்டி


யாரின் அன்பு பெரிதெனப் போட்டியில்
என்னைக் கருவில் சுமந்தவளும்
தயங்கித் தவித்து தான் போனாள்,
என்னை இதயத்தில் சுமக்கும்
உன்னைப் பார்த்த மட்டில்...

வள்ளல்


கடைஎழு வள்ளல்களுள்
புதியவனாய் நான்...
என் தனிமைகளையும்
இரவுகளையும்
உன் நினைவுகளுக்காக
அள்ளிக் கொடுத்ததால்...

வார்த்தை


"ஐ லவ் யூ".
உலகின் மிக
நீண்டதொரு வார்த்தை
காதலைச் சொல்லுகையில்...

Monday 13 December, 2010

கர்வம்

உன்னைப் பற்றி
எழுதிய
வார்த்தைகளுக்கு
கர்வம்
ஏறிவிட்டது போலும்...
ஒரு
முறை
உச்சரித்து
விடு அன்பே
எனது
பெயரை...
கர்வம்
தலைக்கேறிய வார்த்தைகள்
உன்
மொழியைக் கேட்டு
நாணிச்
செத்தொழியட்டும்...

Saturday 11 December, 2010

காதலே இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்...

காதலுக்காய் காத்திருப்போருக்கெல்லாம்
எட்டாக் கனியாகி - கனவிலும்
காதலிக்கா என் மனதில் ஏனடி உதித்தாய்....

முட்செடிகளைப் போன்றதொரு வாழ்க்கையினில்
பெரும்பகுதி கழித்த பின்னர்
பூந்த்தோட்டத்திற்கு ஏனடி ஏதிர்பார்க்க வைத்தாய்...

பெயருக்கும் பாசத்தைப் பார்த்திரா
பாலையாகிப் போன பாழான இதயத்தில்
சோலையாக ஏனடி மாற்றிடச் செய்தாய்...

சிரித்துக் கூட பழக்கப்படா என் இதழில்
வாஞ்சையில்லா உன் கன்னம் பிதுங்கும்
சிரிப்பிற்க்காய் ஏனடி என்னை ஏங்கிச் செய்தாய்...

பட்டமரம் போல் வாழ்ந்து
பாசம்பற்றி தெரியாது வளர்ந்து இன்று
உன் அன்பிற்கு
ஏனடி பரிதவிக்க வைத்தாய்....

நொடிக்கணக்கில் சிரிப்பும்
மணிக்கணக்கில் மௌனத்தையும்
தோழனாய் வைத்திருந்த என்னை
உன் பேச்சினில் ஏனடி எதிரியாக்கினாய்...

நீ தான் வாழ்க்கை எனத் தெளிந்து
உனக்காய் மாற்றங்களை
மறுப்பேதுமின்றி அணிந்துகொண்டேன்...

உம்மென்ற கோவத்தையும் சிறிது சிறிதாய்
இதழ்களின் அசைவிலே உடைத்தெறிந்தேன்...

கட்டுப்பாடின்றி கட்டவிழ்த்து திரிந்த
என் வாழ்க்கையின் நாட்களை
உன் சொற்களில் கடிவாளமிட்டு
அடிபணியச் செய்திட்டேன்...

உன்னை மட்டும் என் உயிரென
எண்ணித்தான் புதியதாய் ஜனனித்தேன்...

ஒவ்வொரு நொடியிலும் உன் அணைப்பிலே
மறுநொடி பிரிய நேரிட - அப்படியே
உறைந்து போக யோசித்திட்டேன்...

வாஞ்சையில் காதலித்து,
கோபத்தில் கண்டித்து
குறும்பாய் கண்ணடித்து
ஆசையாய் முத்தமிட்டு
ஏமாற்றத்தில் கன்னமறைந்து
காதலில் கட்டியணைத்து
தோல்வியில் தோள்கொடுத்து
கனவிலும் உடன்வந்து
அன்னையாய் ஊட்டிவிட்டு
மழலையாய் கரம்பிடித்து
தோழியாய் தோள்சாய்ந்து
அன்பாய் அரவணைத்து
செயலில் துணை நின்று
உறக்கத்தில் மடி தந்து
விரக்தியில் நிழலாக
வெற்றியில் பரிசாக
உடலில் உயிராக
உயிரில் உணர்வாக
ஏனடி இருந்து தொலைந்தாய்...

இப்படி என்னை மட்டும் தவிக்க வைத்து
நீ மட்டும் தொலைந்து போவதற்கா?

உன் பிரிவால் நான் படும்
என்னிலை உனக்கு உணர்த்த
வார்த்தைகளையும் வலி சுமக்கச் சொல்லி
அதன் கண்ணீரை பார்க்க
விருப்பமில்லை அன்பே - நம் காதலுக்கான
கடைசி கண்ணீர் எனதாகவே இருக்கட்டும்...

உனக்கும் வலித்திருக்கும்
எனக்கும் நன்றாகவே புரியுமடி...
சந்தோசமாய் உள்ளேன் என பொய்யுரைத்து
உன் எண்ணத்தில் கல்லெறிய
துளியும் மனமில்லையடி எனக்கு...
உனது சந்தோசத்திர்க்காய்
என்னவேண்டுமானாலும் பொய்யுரைப்பேன் என்று
என்னைப் பற்றி உனக்குத் தெரியுமென்பதால்...

நினைவு இனிமையாகத் தான் இருந்தது அன்பே
என்னருகில் நீ இல்லாத பொழு - இன்று
அந்த நினைவோ மிகக் கொடியதாய் மாறிவிட்டது
எனக்காய் நீ இல்லாத பொழுது....

மரணத்தை தள்ளி வைத்திடும்
எண்ணமெல்லாம் எனக்கில்லை அன்பே...
என் ஆயுளையும் இரவினையும்
உண்டு பெருத்து அடங்காப் பசியோடு
என் அடுத்தடுத்த நொடிகளை
ருசித்திட இருக்கும்
நம் காதலின் நினைவுகளுக்காகவே
விரும்பியே எதிர்ப்பார்க்கிறேன் மரணத்தை...

உடல் விட்டுப் போன உயிர்
திரும்பிடாத பிணமாகத் தான் வாழ்கிறேன்...
என் சரீரம் நீ விட்டுப் போனதிலிருந்து,
உணர்ச்சியின்றி, மகிழ்ச்சியின்றி
திரியும் என்னைப் பார்த்து தான்
நடைபினமென்னும் வார்த்தை உண்டானதோ...

நான் படும் வலிகள் யாவும் உனக்கும்
உண்டென்று தானடி என்னிதயம் வலிக்கிறது...
உன்னைக் கலங்கிட விடாமல்
உன் தலைகோதி
தனிமை உனையண்டாது விரட்டியடிக்க,,
உன்னையறிந்த நான் உன்னருகில்
இல்லையென்ற ஏக்கத்துடன்,
நொடிக கணத்திலும் பிரிவென்னும் இருளில்
உன் நினைவுத் தீ கொழுந்துவிட்டு எரிய
இதயம் மெழுகாய் உருகி
வாழ்கிறேன் கண்களில் கண்ணீரோடு ...

Friday 10 December, 2010

தாலாட்டு


உன் காதில்
தவழும் தொங்கட்டானில்
குடியேறிக் கொள்கிறேன்...
தலையாட்டலில்
தாலாட்டாய்
உறங்கிப் போக...

உந்தன் நினைவு


மறக்க முடியாதொரு
நினைவு தான் காதல்...
மரண நொடிகளில்
உயிர் நடை கொள்ளும் பொழுதும்,
உயிரோடு உடனேறி வருகிறது
உன் நினைவுகள்...

Thursday 9 December, 2010

முத்தம்


கன்னத்தில் நீ தந்த முத்தத்தில்
எச்சில் தடம் - அழிக்க மனமில்லை..
மேற்கொண்டு கிடைக்காதாவென
ஏக்கத்தில் இதயம் தேம்பிட,
சட்டென்று பதித்து விட்டாய்
என் இதழ்கள் உன்னோடு...
பெண்மையின் கண்கள்
நாணத்தில் சொருகிட,
ஆண்மையின் நிலையோ சூடேற,
ஆவியாகிக் காய்ந்து போனது
உனது எச்சில் முத்தம்...

Tuesday 7 December, 2010

நிம்மதி


நிம்மதியற்று திரியும் என்னை
நிம்மதி வேண்டி - கோவிலுக்கு
செல்லச் சொல்கிறார்கள்...
அவர்களுக்கெப்படி தெரியும்,
என் நிம்மது போனதற்கு
காரணமே கோவிலினுள்
உன்னைப் பார்த்ததுதானென்று...

சேலை


பகலில் உடுத்திட
ஆயிரம் வண்ணங்களில்
சேலை தேடுகிறாய்
இன்னமும் திருப்தியின்றி
தினம் தினம் - ஆனால்
இரவினில் மட்டும்
ஓரே வண்ணத்திலான
என்னை மட்டும்
உடுத்திக் கொள்கிறாயேயடி...

காதலர்கள்


உன் அழகை அணைக்கும்
இரு காதலர்கள்..
பகலில்
உன் மேற்தோலாய் சேலை...
இரவில்
உன் சேட்டையன் நான்...

மானம் காக்க


அன்பே உன்
மானம் காத்து அணைக்க,
இவ்வளவு நீள சேலை
ஏதற்கடி...
என் ஆறடி சரீரம் போதாதா?

சிக்கனம்


சிக்கன வாழ்க்கையின் சிறப்பை
உணரலாமேயடி அன்பே இனிமேல்...
இரவினில்
ஒரே போர்வையினில் உறக்கம்..
தனிமையில்
ஒரே சட்டையினுள் வாசம்...

தெரியவில்லையா


காதலிக்கும் நாட்களில்
எங்கு பார்த்தாலும்
நானாகத் தான்
தெரிகிறேன் என்பாயடி...
அந்தக் கூற்றெல்லாம் பொய்யோ?
இன்று கொஞ்சமாவது
தெரியவில்லையாயடி நான்,
மணமாகி உன் கணவனோடு
நீ செல்லும் வழி எங்குமே...

வலி


நீ இறந்திருந்தால் கூட
இவ்ளோ வலி
கொண்டிருக்காதடி என்னிதயம்,
எங்கே உன்னைப்
பார்த்துவிடுவேனோ
என்ற பயத்தினில்
வாழ்வதைக் காட்டிலும்...
உன் பிரிவில்...

காரணம்

எத்தனையோ முறை
பதில் வராதக் கேள்வியை
கேட்டுள்ளேன் அவளிடம்...
ஏண்டி என்னை உனக்குப்
பிடிக்குமென்று?
எந்த மகளுக்குத் தான்
தந்தையை பிடிக்காது போகுமேன்றாள்
வழக்கம் போல் சிரித்தபடியே...

அழுகை


பிறக்கும் பொழுது துளியும்
அழுகவில்லையாம் நான்...
என் வாழ்வில் உன்னால்
ஒரு பிரிவுன்டென்று,
அப்பொழுதே கண்டுகொண்டு
கண்ணீரை எல்லாம் சேமிக்க
தொடங்கி விட்டேன் போல...

மோட்சம்


உன்னை அணைக்க நினைத்த
சேலைக்கு இன்று மோட்சம்
தந்து விட்டாய் உடுத்தி...
எனக்கென்று
தரப்போகிறாய் மோட்சம்...

பார்வை

ஈசலின் வாழ்க்கையும்
என் கண்களும்
ஒன்றுதான் போலும்...
உன் பார்வை
கிடைத்துவிட்ட திருப்தியில்
அன்றைய பொழுதின்
உயிரை முடித்துக் கொள்கிறது...

காதல்

உருகும் மெழுகாய்
என் இரவு...
எரியும் நெருப்பாய்
உன் நினைவு...
விரும்பிக் கருகும்
நான் நூலாய்...
ஒளியாய் உன்
காதல் மட்டுமின்றி....

முத்தம்


வேண்டாமடி இனிமேல்
அலைபேசியில் முத்தம்..
உன் எச்சில் முத்தத்திற்கு
நான் ஏங்கிக் கொண்டிருக்க,
நோகாமல் பெறுகிறது
உந்தன் அலைபேசி...