Tuesday 26 April, 2011

வாழ்க்கை

வாழ்க்கை
விநோதப் பயணத்தில்
விசித்திர சாலை...

நேரடிப் பார்வைகள்
இங்கு செல்லுபடியாகா...
கானல் நீராய் காட்சி தரும்
வெற்றிகளும் வாய்ப்புகளும்
அற்ப மனிதர்களின்
ஆசைக்கு நெய்யூற்றும் வேலை...

வாய்ப்புகள் கூட உனக்கு
நிரந்தரமில்லை என
தலையில் குட்டிச் சொல்கிறது
நிரந்தரமில்லா உலகம்...

தோல்விகள் நிழலாய்,
வெற்றிகள் நிலவாய்,
சங்கடங்கள் உடன்பிறப்பாய்,
விமர்சனங்கள் உற்ற தோழனாய்,
விரக்திகள் உடையாய்
ஏமாற்றமே சொத்தாய் கொண்ட
சராசரி மானிடன் நான்...

தன்னம்பிக்கையில்
தயங்காது உழைத்தாலும்,
முயற்சியில்
மும்முரமாய் இருந்தாலும்,
திட்டத்தில்
கட்சிதமாய் செயல்பட்டாலும்,
வெற்றி மட்டும்
எனைப் பார்த்து பல் இளிக்க...

ஒவ்வொருமுறை தோல்வியிலும்
படிக்கட்டாய் ஏறிப்போக,
முயற்ச்சியின் அறுவடையாய்
கண்களுக்கு புலப்படா வெற்றி
நீண்டு செல்லும் படிக்கட்டுகளும்...

தத்துவங்கள் சொன்னபடி
விடாமுயற்சி கொண்டால்,
அடாது முயற்சியிலும்
விடாது தோல்விகள்...

மெழுகாய் மனம் கொண்டாலும்
ஏமாற்றத்தின் ஒளியில்
இரும்பாகிப் போகிறது..

போதுமடா சாமி என்று
விரக்தியின் விளிம்பில்
உயிர் துறக்க நினைத்தாலும்
அவ்வளவு சீக்கரம்
விடுவேனா என்று
விடாக்கொண்டனாய் வாழ்க்கை...

No comments:

Post a Comment