Saturday 23 April, 2011

திரைப்பட நினைவுகள்


நாம் ஒன்றாய் பார்த்த
திரைப்படங்கள் யாவும்,
இன்றும் காண நேரிடுகையில்
நம் காதல் தாண்டி
எண்ணத் திரையில் ஓடுகிறது...

ஒவ்வொரு படத்திற்கும்
ஒவ்வொரு ஞாபகம்.
நமக்கு பிடித்ததை சொல்லும்
கதா பாத்திரங்களின் வாழ்க்கையாய்
நாமும் மாறிப்போன மாயமென்னடி..

சந்தோசமாய் முடிந்து போன
காட்சிகளில் கூட
கண்கள் கலங்கி நிற்கிறதே..

அருகருகே அமர்ந்து
என் தோளில் நீ சாய்ந்து
ஓடிய நிழல்கள் தாண்டி - இன்று
உருவமாய் வந்து மறைகிறது...
என் தோளில் சாய்ந்துள்ள
உந்தன் நினைவுகளோடு...

புதைந்து மட்கிப் போன
காதலின் சிரத்தை வெளியே
எடுத்துப் போடும் அவலம் தாண்டி
திருமணத்திற்கு பிறகு
சேர்ந்து பார்க்க வேண்டுமென்ற
நாம் பார்த்து இரசித்த காட்சிகளும்
ரணமாக்குகிறது என் இதயத்தை...

உனக்கும் என்னைப் போலவே
வலியும் வேதனையும் உண்டென்ற
நம்பிக்கையில் தானடி
நம் காதலின் ஆன்மா
உலாவிக் கொண்டிருக்கிறது..

சொல்லிடாதே வலி இல்லையென
திரையரங்கில் அனாதையாய் கிடக்கும்
நுழைவுச் சீட்டாய்,
இறந்து போகும் என் காதல்
அதனைச் சுற்றி மொய்த்திடும்
நம் காதல் நினைவுகளோடு...

No comments:

Post a Comment