Saturday, 22 October 2011

ஒரு தலைக் காதல்

தனியாக நிற்கும்
பனை மரத்தின்
விளங்காப் பயணம் தான்
ஏறத்தாழ
ஒரு தலைக் காதலிலும்...

மத்தாப்பு

உன் புன்னகைப் பொறிக்காய்
பொசுங்கிக் கருகும்
மத்தாப்பு நான்.

மஞ்சள் மழை

வெய்யிலினூடே பெய்யும்
மஞ்சள் மழையின்
ஆனந்தம் தானடி,
சொல்லாத காதலை
என்னுள்ளே வைத்து
உன்னிடம் பேசுகையில்...

காதல் உச்சம்

நம் காதலின்
உச்சத்தை கொண்டாடினோம்
தாம்பத்தியத்தில்...

காதலின் விசித்திர இரவுகள்.

படுக்கும் வரையில்
உறக்கம் கண் கட்டும்.

படுத்தால் ஏமாற்றி
பல் காட்டும்..

தலையணைக்கு
கை, கால் முளைத்து
அவள் உருமாறும்.

நினைவும் உருவம் கொண்டு
போர்வைக்குள் இறுக அணைக்கும்...

நாழிக்கொரு முறை
நகராத கடிகாரம் கண் பார்க்கும்...

மின்மினி ஒளி கண்டாலும்
விடிந்ததாய் எட்டிப் பார்க்கும்..

தொலைக்காட்சியின் அலைவரிசைகள்
நிலையின்றி நடை போடும்.

படுக்கையில் பயணிக்கும்
உடலும் தடம் புரளும்.

விரும்பிய நேரங்கள் உறக்கமற்று
விடியும் நேரம்
நிலவோடு கண் அயரும்

காதலின் விசித்திர இரவுகள்.

ஜெய்க்க வைத்திடும் அவள்

பிறரிடத்தில்
அதிகமாய் பேசுபவள் ஏனோ
அதிகமாய் பேசாத
என்னைத் தான்
பேசச் சொல்லி கேட்கிறாள்...

பூவாய் பூத்திடும்
புன்சிரிப்பின் சொந்தக்காரி,
பூட்டப்பட்ட என்னிதழ்களை
சிரிக்க வைத்து
இரசிக்கிறாள்...

எளிமையில் அழகி
படோபடத்தில் பேரழகி
எனக்கு உடை அணிவித்து
அழகு பார்க்கிறாள்...

அதிக காதல்
யார் எனப் பந்தயம்
நானே பெரியவன் என
ஒவ்வொன்றாய்
என் காதல் பெருமையை
எடுத்துக் கூற

வழக்கம் போலவே
என்னை ஜெய்க்க வைத்து
என் மகிழ்ச்சியில்
சந்தோசப்படுகிறாள்...

கவிதைகளின் எண்ணிக்கை

உன்னைப் பற்றி
என்னமே இல்லையென
பொய் சொல்லிட
முடியவில்லை அன்பே..

உன்னைப் பற்றிய
எனது கவிதைகளின்
எண்ணிக்கையே
காட்டிக் கொடுத்துவிடும்...

Tuesday, 18 October 2011

நிலவுப் பிரதி

ஜன்னலின் வழியே
நீ நிலவைக் காண்கிறாய்...
அந்த நிலவோ
ஜன்னலினூடே தன்
பிரதியைக் காண்கிறது...

சூரியோதயம்

விடியல் என்பது
சூரியோதயம் அன்று...
இரவு உறக்கத்தில்
அரைமணி நேரமாயினும்
உனது கனவின்
முடிவாகும்...

Sunday, 9 October 2011

நவராத்திரியில் ஒரு நாள்


ஒவ்வொரு வருடமும்
நவராத்திரி விழா.
பலவித நிகழ்ச்சிகள்
அரங்கேறும் எங்களது ஊர்
அரண்மனைக் கூடம்...

எங்கள் காதல் நிகழ்ச்சியும்
பலமுறை அரங்கேற்றம்...
மாலையின் நிலவோடு
மல்லிகையின் சந்திப்பாய்..

முன்கூட்டியே வரச் சொல்லியும்
தேட வைத்திடும் கள்ளி அவள்...
கொலுவின் பொம்மையாய்
அவளது வருகைக்காய்
எனது காத்திருப்புகள்...

என் பார்வைக்கு பதுங்கி
என்னை ஏமாற்ற
வெளிச்சம் மறைக்கும்
மின்மினிப் பூச்சி அவள்...

இன்று வரவில்லை என்ற குறுஞ்செய்தி
என்னை தீண்டுகையிலே
அவளது வருகை உறுதியாகிடும்...

மொத்தக் கூட்டத்தில்
அவளைத் தேடுவதொன்றும்
சிரமமில்லை எனக்கு...

என்னைத் தேடி
எட்டுத் திசையும் சுழன்றிடும்
தலை அவளது மட்டுமே...
கரு வண்டின் வேகத்தில்
சுழன்றிடும் கண்களும் காட்டித்தரும்...

மொட்டுகளுக்கு நடுவே
மலர்ந்த தாமரையாய்
அவள் முகம்..
எனைக் கண்டதும்
மேலும் சிவந்திடும்...

அழகு கலை நிகழ்ச்சிகள்
கண் முன்னே நடக்கையிலும்,
அவள் பார்வை நிகழ்ச்சியில்
தவிர்த்திடுது மனம்...

கூட்டத்தின் அங்கமாய்
அவளருகே என்னுடல் சங்கமிக்க,
பண்டமாற்று முறையில்
அவளுக்கான வளையல்களும்
எனக்கான பரிசுகளும்
பரிமாற்றம் நடக்கும்...

கூட்டத்திநிரைச்ச்சலும்
மௌனமாய் அடங்கிப் போக,
அவள் இரகசியப் பேச்சு மட்டும்
ஒலிப் பெருக்கியில் அலறிடும்...

வருடங்கள் கடந்த பின்
அவள் குடியோடு அவளும்
என் குடியோடு நானும்
தனித் தனியாய் கூட்டத்தில்...

ஏனோ ஏங்கித் தொலைக்கிறது
பாழாய்ப் போன மனம்
காலம் உண்டு விழுங்கிய
காதலின் நிஜங்களுக்கு...

யார் வராது போனாலும்
வருடா வருடம்
எங்களைத் தேடி தேடி
ஏமாற்றத்தில் பரிதவித்து
தொலைந்து போகிறது
எங்கள் காதல்...

சொந்தம்


உன்னை சொந்தமாக்கிட
காத்திருக்கச் சொன்னாய்...
காத்திருப்பு மட்டும்
எனக்குச் சொந்தமாக,
நீயோ அடுத்தவனுக்கு
சொந்தமாக...

இனிமை


என் சொந்தமான
பேனையின் வரிகளைவிட,
என்னை அணைத்தது
துயில் கொள்ளும் வேளையில்,
எனது முதுகில்
உன் விரல் வரையும்
கவிதையின் இனிமை
அழகு தானடி...

இரசிக்க கூடாதா

தடுக்கி விழுந்ததும்
சிரிக்கும் என்னை
முறைப்பில் திட்டுகிறாள்
தூக்காமால் சிரிப்பா என்று...

முதன் முதலாய்
நடை பழகும் குழந்தையின்
தடுமாற்றமும் தத்துபித்து நடையும்
கோணும் முகமும் அழகு தானடி...

நான் இரசிக்க கூடாதா...

திருத்தம்


திருந்திய இதயம்
திருட்டுப் பார்வையில்
திருந்தாத உன் தாவணியில்...

திருந்திய தாவணியில்
திருந்த மறுக்கிறது
தீண்டிய பார்வையில்...

Saturday, 8 October 2011

அகலிகைகளின் எண்ணம்


சாலையில்
இறைந்துக் கிடக்கும்
மலர்கள் நசுங்காவண்ணம்
நீ நடக்கிறாய்...

உன் பாதங்கள் பட்டு
மோட்சம் பெறுவதற்காய்
காத்திருக்கும் அகலிகைகளின்
எண்ணம் தெரியாது...

வருகையினை உறுதி செய்கிறது


உனது வருகையினை
தினம் தினம்
உறுதி செய்கிறது,
வருகைப் பதிவேடோடு,

நீ அமரும் இடத்தில்
உன் தலை ஏறி உதிர்ந்த
மல்லிகைப் பூவும்...

பட்டாம்பூச்சி


பட்டாம்பூச்சி சிறகு பிடித்து
மீண்டும் பறக்க விடுகிறாய்...
சிறகின் வண்ணங்கள்
உன் விரலிலென
நீ மகிழ...

உன் விரல் தீண்டலின்
இன்பம் கண்டு
சந்தோசப் படப்படப்பில்
பட்டாம்பூச்சி...

Friday, 7 October 2011

காதலில் விழுந்து காற்றில் மிதக்கையில்...

இரைச்சலற்ற சப்தங்களில்
போக்குவரத்தில்லா நெரிசலின் ஊடே
இடிபடாது பயணிக்கிறது
என் மனம்...

ஆவியற்ற கடுஞ்சூட்டில்
இனிப்பில்லா சக்கரை தித்திப்பில்
அரைமணி நேரமாய்
பருகுகிறேன் அரைகிண்ணம் தேநீர்..

குளிர்கின்ற வெயிலிநூடே
இளஞ்சூட்டின் தென்றல் கதகதப்பில்
இறுக்க போர்த்திக் கொள்கிறேன்
கம்பளிப் போர்வையினை...

பார்வையின் மொழியிலே சப்தமாய்
காட்டுக் கத்தலின் கட்டளையில்
மௌனத்தின் பேரிரைச்சலில்
எதிர் பார்க்கிறேன் பதிலை...

தினமும் நடந்திடும்
அரிதான விசயங்களையும்
கண்டும் காணாது
பொக்கிஷ புதையலையும்
அலட்சியப்படுத்துகிறேன்...

இரவின் கண் கூசும் வெளிச்சத்தில்
கண் இடுக்கிய பார்வையில்
கருப்பு கண்ணாடியில் செயல்படும்
எந்தன் அன்றாட நிகழ்ச்சிகள்...

மிகச் சாதாரண
எந்தன் அசாதாரண வாழ்க்கை
புலப்பட்ட விடையும்
விளங்காது வித்தியாசமாய்..

காதலில் விழுந்து
மேல் நோக்கி காற்றில் மிதக்கையில்...

உயிரின் காலத்தை நீட்டித்துக் கொள்ள...


பொக்கை வாயின்
கறிதின்னும் ஆசையாய்
நிராசையாய் போனதடி
உன்னுடன் தொடர முடியா
என் காதல்...

பாதுகாக்க தவறி
புதைக்கப்பட்ட செல்வமாய்
சிலநேரம் இதயத்துடனே
புதைந்து போகிறது
ஒரு தலைக் காதலும்...

உரியவளுக்கு இன்றி
பொறுத்தவளுக்கு கிடைக்கும்
பெரும் புதையலாய்
நெஞ்சில் புதைந்த காதலும்
வருங்கால துணைவிக்கு...

சாட்சிகள் இருந்தும்
நிரூபிக்காத குற்றவாளியாய்
ஒரு தலைக் காதலும்..

கச்சேரியில் வெறுமையும்
வெறுமையில் கச்சேரியும்
அரங்கேரிடும் இந்த
அலைவரிசையில் மட்டும்...

ஊருக்கெல்லாம் சொல்லிய
உன் மீதான காதல்
உன்னிடம் எட்டும் திராணியற்று
பாதியிலே காற்றில் கரைகிறது...

அறுபது நொடி
வானவில்லின் சந்தோசத்திற்கு
வாழ்க்கையை ஈடாக்கிடும்
இந்தக் காதல்...

சொல்லிடாத காதல் என்னமோ
காட்சியில் மட்டுமே
நம்பிக்கை தந்து
மகிழ்ச்சி ஊட்டும்
கானல் நீராய்...

பார்த்து பார்த்து
உயிரின் காலத்தை
நீட்டித்துக் கொள்ள...

இழப்பது நொடிகள் மட்டுமல்ல


உன்னை ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியுமாய்
இழக்கிறேன்.
நினைத்தப்படியே தவிக்கிறேன்.
நம் வண்ணக் காதலில்
சாயமற்று பொலிவு இழக்கிறேன்...

கண்ணாடிக்குள் பொத்தி வைத்த
உந்தன் மதியழகை
துண்டுகளாய் சிதறடித்தேன்
மீட்டு வர இயலாத
பெரும் பொக்கிசத்தை...

உனது பிரிவில்
சாபம் கண்ட பாலையாய்
தீராத தாகம் கண்ட மனம்
மெல்ல தாகம் தணிக்கிறது
தினமும் கண்ணீர் கொண்டு..

மானம் மறைக்க என்று
அங்கங்கு உள்ள ஓட்டுகளோடு
உயிரெனும் சட்டையினை
அணிந்து திரிகிறேன்
மீதமுள்ள நாட்களை
என் சுற்றத்திற்காக...

சில நொடிகள் நிலை கொண்டாலே
மனம் உற்றுப் பார்வையில்
வெற்றுப் புள்ளியில்
மையம் கொள்கிறது...

நினைவுகளின்
காட்சி ஊட்டலில் மெல்ல
வளர்ந்து நிலைகொள்கிறது...

இப்படியே
வெறுமையான பார்வையிலேயே
இழப்பது நொடிகள் மட்டுமல்ல
உன் காதலையும் தான்...

விதியின் நாளைக் கண்டு...


சற்றே பலமான காற்றிலே
தனது உயிரின் கோர்ப்பினை
மெல்ல விடுவித்த படி
வயோதிக இலைகள்...

விழுவோமா வேண்டாமா என
தற்கொலை முடிவில்,
ஒத்தையா இரட்டையா
போட்டுப் பார்க்கிறது
மழை...

ஈரப்பதம் கொண்டு
சுற்றிடும் காற்றும்
என்னில் மோதிடுகையில்
குளிர் எட்டாது மூளை
செயலற்று நிற்கிறது...

இடி மின்னல் துணையின்றி
எட்டிப் பார்க்கும் முனைப்பில்
கண்ணீர்...

விளக்கமற்ற கேள்வியோடு
தனித்து நிற்கையில்
சற்றே குறைய
தோல்வியினை ஏற்கும் வேளையில்
உடைந்து எட்டிப் பார்க்கிறது
மழையோடு கண்ணீரும்...

நீண்டதொரு பூகம்பத்திற்கு
அடையாளங்கள் மெல்ல
அரங்கேறிக் கொண்டிருக்கிறது
என் இதய உருண்டைக்குள்...

உன் காதல் அறுத்தெறிய
தயாராயிருக்கும்
விதியின் நாளைக் கண்டு...

Thursday, 6 October 2011

தடம் மாறிப் பயணிக்கும் வாழ்க்கை


எத்தனையோ பெண்கள்
கடந்து செல்ல,
ஒவ்வொரு முகமாய்
உன் சாயல் தேடுகிறேன்...

உன்னைக் காணா நேரம்
உன் நகலிலாவது கண்டிட...

நீ பார்த்து ரசித்த
ஒவ்வொரு இடங்களிலும்
நானும் ஒரு பொருளாய்
நின்று பார்க்கிறேன்...

நீ ரசித்த இடத்தில்
என்னையும் ஒரு காட்சியாய்
நீ ரசித்ததாய் எண்ணி...

நீ இருக்கும்
திசை நோக்கியே
எனது பெரும்பாலான
பார்வைகளும்
தலை சாயதல்களும் உள்ளது...

உனக்கடுத்த
இடத்தினில் நின்றபடியே
உன் மூச்சுக் காற்று
சிறை பிடித்து
நெஞ்சுக் கூட்டில் அடைக்கிறேன்...

என்னைப் பார்த்து
தினசரி நாட்காட்டியும்
எள்ளி நகையாட,
இரவுகளோ என்னை
சித்திரவதை செய்திட
சிரித்தபடியே தயாராக...

நாட்கள் ஓடுவது புலப்பட,
உன் கண்ணின் பார்வை மொழிக்கு
அர்த்தம் புரிந்திடாமல்
சேருமிடம் தெரியாது
தடம் மாறியே பயணிக்கிறது
வாழ்க்கை...

தேடும் இரவை


நீண்டதொரு இரவின்
தனிமைப் பெருங்கடலில்,
சிறு துளையோடு
ஓடத்தில் பயணம்...

துடுப்பற்ற ஓடத்தின்
பயண திசையை தீர்மானிக்க
காற்றும் அலையும்...

என் வாழ்க்கை ஓடமும்
அதில் விதிவிலக்கல்ல...

உன் பார்வைகளும்
நினைவுகளும் ஒட்டிடும்
என் நாட்கள் போல்...

நிலவின் மங்கிய வெளிச்சமே
கலங்கரை விளக்காய்,
திசை காட்டியாய்
உன் பார்வைகளில்...

அடை மழை பார்வையில்
விடாது காற்றின் நினைவில்
தத்தளிக்கிறது இதய ஓடம்...

தனிமைத் தீவு ஏதேனும்
தென்படாதா என்றே
மெல்ல விடிகிறது...

தூரத்தில் பகல் தீவு
கண்ணில் சொர்க்கமாய் தெரிய
சீக்கரம் சென்றிட
வேகமாய் துடிக்கிறது...

நீந்திக்
கரையேறுகிறது
என்னிதயம் உன் நினைவில்...

வேலைகளுக்கு நடுவில்
உன் நினைவுகள் ஓய்வெடுக்க..

ஆடிய கால் என்றும்
ஓய்ந்தது இல்லை...
வெறுமெனே வாழ்வில்
அதிகம் ஈர்ப்பில்லை...

மீண்டும் தேடுகிறது இரவினை
அந்த ரணமான இம்சைக்கு...

பொதி


வாழ்க்கை உணவிற்கு
பெரும் பொதி
சுமக்கும்
கழுதையாய்,

உன் காதலுக்கு
பெரும்
நினைவுகள் சுமந்து
பயணிக்கிறது
என் வாழ்க்கை..

மீண்டும் பிறப்பென்றால்


மீண்டும் பிறப்பென்றால்
தன் எடை போல்
மூவிருபது எடை தாங்கும்
ஏறும்பாக்கிவிடு இறைவா...

இப்பிறப்பில் - அவளின்
நினைவு கணம் தாளாது
தள்ளாடும் என்னை...

ஜாதி எனும் பேய்




குழந்தையும்
தெய்வமும்
ஒன்றேன்பதாலோ
அவர்களிடம் நெருங்குவதில்லை
ஜாதி எனும் பேய்...

பட்டியல்



தனக்கு
கணவனாய் வரப்போகும்
ஆண்களிடம் தான் வெறுக்கும்
பட்டியலில்
மது புகையோடு
மூன்றாவதாய்
தங்கம்...

பதிலற்ற மௌனம்

என்னில் தாலி ஏறும்
காட்சியினைக் காண,
என் வாழ்வில் பங்குகொண்ட
தாய் முதல்
நடக்காத கிழவியும் வந்திட,

என் சுக, துக்க
தனிமைகள் பகிர்ந்த
வீடு மட்டும் ஏனோ
பதிலற்ற மௌனத்தில்...

செவிப்படா தவம்


கடும் தவமும்
சில தேவதைகளை
வரம் தந்திட செய்வதில்லை...

காதல் வரம் கேட்டு
உயிர் வரை உருகியும்
கண்டிடாத உன்னை போல்...

தேவதைகளின் வரம்



யாரடி சொன்னது
அழகு தேவதை என்றால்
சந்தோசங்களை மட்டுமே
வரமாய் தந்திடுமென...

உன் பார்வை தந்த
காதல் சாபத்தினை
தெரிந்திடாமல்...

பிறந்த தேதி


தேவதைகளின் பிறப்பு
பெரும்பாலும்
யாருக்கும் தெரிவதில்லை...

உன் பிறந்த தேதி
தெரிந்த மிகச்சிலரில்
நானும்...

ரோஜாவின் விருப்பம்



ரோஜாக்கள் யாவும்
செடியிலே பூத்து,
செடியிலே வாடுவதை தான்
பெரும்பாலும் விரும்புகின்றன...

உன் கூந்தல் ஏறி
அழகாய் காட்சி
தருவதற்கு முன்...

வரம்


மூன்றடி இடம் கேட்ட
வாமணனிடம்,
அனைத்தும் இழந்த மன்னனாய்,

நிம்மதியான
என் வாழ்வை இழந்தேன்
உனது மூன்று வார்த்தைக்கு...

தனிமை


என்னையும்
என் சுற்றத்தையும்
மிகச் சரியாய்
பிரதிபலித்த கண்ணாடி...

கல்வி நிறுவனம்


பெரும்பாலான
கல்வி நிறுவனங்கள்
கல்வியின் சேவை மறந்து
பணத்தின் தேவையில்
கறவை நிலையமாய்
உருமாற்றம்...

தோழியும் கவிதையும்

தோழி என்ற தலைப்பில்
கவிதை கேட்டாள் தோழி...

சிறிது நிதானித்து
அவள் பெயரினை எழுதி
அவளிடமே கொடுத்தேன்...

பெயரை கேட்கவில்லை
நட்பை பற்றி கேட்டேன் என்றாள்...

உன் பெயரைப் பார்க்கையிலே
புரிந்து கொள்ள வேண்டாமா
நட்பின் பெருமையினை என
அவளிடமே திரும்பக் கொடுத்தேன்...

Wednesday, 5 October 2011

பேருந்து...



சிலருக்கு
வாழ்வின் நினைவுகளை
பின்னோக்கி பயணிக்க
முன்னோக்கி சுற்றும்
பயணச் சக்கரம்.

தோழன், தோழி


எனக்கான சரிவில்
தோள் தந்து
தாங்குகிறான் தோழன்
என் பாரத்தின் பாதியை...

நம்பிக்கையின் வார்த்தையில்
நிமிர்த்துகிறாள் தோழி
என் பாரத்தின் மீதியை...

கண்ணோடு கூரிய நாவும்


காதலுக்கு
கண்ணில்லை எனக் கூறும்
உலகத்தாருக்கு,

ஆணும் பெண்ணும்
நட்பு பாராட்டுகையில் மட்டும்
ஏனோ கண்ணோடு
கூரிய நாவும்
முளைத்துவிடுகிறது...

பெண் நட்பு

ஆண் நட்பைக் காட்டிலும்
பெண் நட்பே
மிகை எனத் தோன்றுகிறது...

புரளிப் பேச்சுகளிலும்,
சந்தேகப் பார்வைகளிலும்,
தொலைந்து போகாது,
உண்மை நட்பினை
தொடர்ந்திடும் நேரங்களில்....

பெண் நட்பு

தாய்ப் பாசத்தினை
தந்தையிடம் காணும்
தாயில்லா குழந்தையாய்
பெண் நட்பும்...

ஏனோ இரண்டுமே
வெகுவாய் வெளிச்சத்திற்கு
வருவதே இல்லை...

இரு வேறு வார்த்தையில் நட்பு


காமமென்ற ஒன்று
நுழையாத மட்டும்,

காதலும் நட்பும்
ஒரே விளக்கத்திற்கான
இரு வேறு வார்த்தைகள்...

முற்போக்குவாதி


தன்னை
முற்போக்குவாதியென
வாதாடும் எத்தனை பேரால்
உரக்க கூற முடியும்,

என் தோழியினை
ஏற்றுக் கொள்ள
மனைவியிடம் கேட்டதை போல்.,

மனைவியின் தோழனையும்
ஏற்றுக் கொள்ளக் கூறும்
அவளது கூற்றையும்
ஏற்பேன் என்று...

அதிக இடம்


பாசத்திற்கு பாலினால்
வேடம் தந்து,
தாய், தந்தை எனப் பிரித்து,
தாயின் பாசத்திற்கு
அதிக இடமெனக் கூறுகையில்,
நட்பு எம்மாத்திரம்.

பெண் நட்பும் சற்றே
அதிக இடம் கொடுக்கப்பட்டு
சில நேரங்களில்
காதலாய்...

பண்பு


மிகச் சாதாரணமாய்
சொல்லி விடுகிறார்கள்,
சிறுபிள்ளை தனமாய்
நடந்து கொள்கிறேன் என்று...

எத்தனை பேர்
பார்த்திருப்பார்கள்.
அழவைத்தவனை மனித்து
புன்னகைக்கும் பண்பினை
மழலை எனும் ஞானியிடம்...

விழிகள் பேசிட


உனக்கு மட்டும்
எப்படியடி வாய்த்தது
இதழ்கள் பேசும் வார்த்தைகள்
விழிகள் பேசிட...

Tuesday, 4 October 2011

உணவு தேடித் திரியும் பறவையாய் நானும்

உணவு தேடி
புறப்பட்ட பறவையின்
நிலையில் தான்
எனது ஒவ்வொரு விடியலும்
உதயமாகிறது...

உயிர் வாழ
இன்றேனும் நல்ல இரை
சிக்காதாவென
எண்ணத்தின் சாயலிலே ,
உன்னை இன்றேனும் கண்டுவிட
அந்நாளை எதிர்கொள்ள
புறப்படுகிறேன்...

தேவையில்லாக் குப்பையும்
உண்ணப்படா இரையுமாகவே
கண்ணில் புலப்படுகிறது,
ஞாபகம் இல்லாத
முகங்களும் கூட,
அறிமுகம் செய்து
நினைவுபடுத்துவதை போல்...

தூரப் பார்வையில்
காட்சியாய் இரை கிடைக்க,
மனதில் மகிழ்வோடு
விரைந்து போய் பார்த்திட ,
கானல் நீராய்
ஏமாற்றிடும் அற்றினையாய்,
உன் சாயல் பெண்கள்...

பெருத்த உணவுண்டு
சிறிதும் இடமற்ற நாளில்
தானாய் சிக்கி - பசிக்கையில்
கண்ணாம்பூச்சி ஆடிடும் இரையாய்,

காதல் நாட்களில்
அடிக்கடி கண்ணில் விழும்
உந்தன் சரீரம் - ஏனோ
வேண்டித் தேடுகையில் மட்டும்
கைக்கெட்டா கனவாய்..

ஒவ்வொரு வேளையிலும்
ஏமாற்றத்தையே
உணவாய்க் கொண்டு,
நாளைக்கு நல்ல வேட்டை
என்றெண்ணி பசி அடங்கும்
பறவையின் நிலையிலே,
அடங்கிப் போகிறது
நாளைய தேடலுக்கான
எந்தன் நாட்கள்...

கசக்கி எறியப்பட்ட எந்தன் இரவுகள்...

கடிகாரத்தின்
ஓட்டமும் கூட,
இரைச்சலாகிப் போன
இரவொன்றில்
என் தனிமைப் பொழுதுகள்...

ஒவ்வொரு
நொடியின் நகர்த்தலும்,
என்னிதயம் குத்தியபடியே
நகர்ந்து கொண்டிருக்கிறது
ரத்தச் சிவப்பின் இருளில்...

போராட்டங்கள் முடிந்து
செல்லும் உறக்கம் கூட,
போராட்டமாய் எனக்கு...

யுத்த களத்துக்கான
எந்தவொரு அடையாளமும் இன்றி
காட்சியளிக்கிறது
எந்தன் படுக்கை...

விளக்குகள் அணைத்ததும்
தானாகவே எரியத்
தொடங்கி விடுகிறது
உந்தன் நினைவுகள்...

உன் அழகு முகமும்
இதழ் சிரிப்பும்,
அழியாத ஓவியமாய்
இமைகளுக்குள் குடிகொள்ள,
நினைவின் வெளிச்சம்
இன்னும் சற்று
பரவத் தொடங்குகிறது...

மணிகள் சிறுதேனும்
நகராதா எனப் பார்க்கையில்
என்னை வலிப்படுத்தவே
வீம்பாய் நகராது
நிலைகுத்தி நிற்கிறது...

நொடிகள் எனக் கரைந்த
உன்னுடனான மணிகள்,
இன்று மணிகளாய்
கரைந்து கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நொடியும்...

போர்வை இழுத்து மூடி
வெளிச்சம் மறைக்க முயல,
போர்வையாய் படர்ந்த
உந்தன் நினைவுகள்
மூச்சு முட்ட அமிழ்த்துகிறது...

வாழ்ந்த ஏழு வருடங்களையும்
புதிதாய் தூசுதட்டி
இருளின் திரையில்
இதயம் ஒட்டிக் காண்பிக்கிறது...

போராடிக் களைத்த விடியலில்
என் படுக்கை யாவும்
உந்தன் நினைவுகள்
சுகமாய் உறக்கம் கொள்ள,

ஓரமாய் ஒரு மூலையில்
அனாதையாய் கிடக்கிறது
கசக்கி எறியப்பட்ட
எந்தன் இரவுகள்...

Monday, 3 October 2011

அழியாத கல்வெட்டாய்

அழியாத கல்வெட்டாய்
உந்தன் நினைவுகள்...

நீருடன் சேராது போன
எண்ணையாய் உன் காதல்...

மாற்றங்கள் யாவையும்
ஏற்றுக்கொள்ளும் மனம்
ஏனோ நீ இல்லா
வாழ்வை மட்டும்
ஏற்க மறுக்கிறது...

உன் அன்பின் நிழலிலே
நடை பழகிய
எந்தன் காதலுக்கு,
உன் துணையற்ற
வாழ்க்கையில் பயணிக்க
பொசுங்கிப் போனது பாதம்...

எத்தனையோ பொழுதுகளில்
மனம் உறுதி கொள்ளும்,
நீயற்ற வாழ்க்கையை
வாழ்வதென்று...

ஆனாலும் அருகாமையில்
காதல் ஜோடி பார்க்கையிலும்
நாம் பழகிய தருணங்களின்
தீராத நினைவுகளிலும்
சம்மட்டி கொண்டு
அடித்து நொறுக்கப்படுகிறது
எந்தன் வீராப்பு...

கண்களின் முறைப்பிற்கே
கதறிடும் குழந்தையிடம்,
பிரம்பு கொண்டு விலாச
தாங்காத அரற்றலிலே,
கழிகிறது எதிர்காலம்...

கூடவே என்னுயிரும்
கரைந்து கொண்டிருக்கிறது.
என் காதல் யாவும்
மொத்தமாய் வெளியேறிடும்
நேரத்திற்காய் காத்திருந்து...

Friday, 30 September 2011

மறதி

தனிமைக்கும்
ஞாபக சக்திக்கும்
நெருங்கிய தொடர்புண்டு போல்...
மிக முக்கிய விசயங்களும்
மறந்து போனாலும்,
நாமிருந்த பொழுதுகளில்
அரங்கேறிய காதலின்
நொடிகளும், வார்த்தைகளும்,
மறந்திடாமல்
மனத் திரையில் ஓடுகிறது,
தனிமையில் மட்டும்...

தாய்மொழி

பெரும்பாலான நேரங்களில்
அவளின் தாய்மொழி
மௌனம்...

மௌனம்

நடப்புக் காதலில்
பெரும்பாலான காதலர்களுக்கு
திருமணத்திற்கு முன்
பிடிக்காத மொழியும்,
திருமணத்திற்கு பின்
பிடித்த மொழியுமாய்
மௌனம்...

அழகு

அழுகையிலும்
சிரிக்கையிலும்
ஒப்பனை இல்லா
சிறந்த அழகு
மழலை...

எச்சில்

சிறு துளி
எச்சில் தெறித்திட்டாலும்
துடைத்திடும் மனம்,
ஏனோ துடைக்கவில்லை
மழலையின்
எச்சில் முத்தத்தில்...

மருமகள்

என்னிடம்
நல்ல மருமகள் கேட்ட
என் தாய்க்கு,
நான் மருமகன்
ஆகிவிட்டேன் போல்.
அவரிடம் நீ காட்டிய அன்பில்...

விடுப்பு

உன் கண்களை
நேர் எதிர் பார்த்து
காதல் சொல்கையில் மட்டும்,
ஏனோ எந்தன்
தைரியமும், ஆண்மையும்
சொல்லாது விடுப்பு
எடுத்துக் கொள்கிறது...

விதிவிலக்கான என் காதல் குழந்தை...

முதன் முதலாய்
வைரத்தை கண்டவனின்
அலட்சிய அறியாமையில் தான்,
நீ சற்றும் புரிந்து கொள்ளாத
என் காதல்..

ஏகாந்த பார்வையின்
வீரியத்தில் பெரும்பாலும்
அடங்கிப் போகும் நாணலாய்,
உருமாற்றம் கொள்ளும்
ஆலமரமாகிய என் ஆண்மை...

நுரை பொங்கும்
அலையின் ஆர்ப்பரப்பில்
ஓடி அடங்கும் ,
உந்தன் வருகைக்கான
ஏக்கங்களுக்குக் சொந்தமான்
என் இதயம்...

கூடு திரும்பாத
பறவையின் பரிதவிப்பில்
இரவுக்கு அடைய மறுக்கும்
உன் உருவம் காணாத
என் பகல் பொழுதுகள்...

அழும் குழந்தையின்
கண்ணீரை எவரும்
வெகு நேரம் பார்ப்பதில்லை.
விதிவிலக்காய்,
உன் பார்வையில் கருவாகி
பிறப்பெடுத்த என் காதல்
குழந்தையை தவிர்த்து...

நிறுத்த நிலையின்றி வாழ்க்கை...

எத்தனை பெரிய காயங்களும்
ஆற்றிடும் காலம்,
எதிர் வினை புரிகிறது
என் விதியில் மட்டும்...

வருடங்கள் ஆகா ஆகா
வயது ஏறுகையிலும்
இன்னும் அதே
இளமையோடு தான்
உன் நினைவுகள்
என்னுள் வளம் வருகிறது...

சிறிது சிறிதாய்
செல்லரிக்கும் கரையானாய்
உன் சிரிப்புகளின் சிதறல்கள்
இன்றும் - நீயற்று
சடலமாய் கிடக்கும்
இதய பிண்டத்தை
கூரு போடுகிறது...

ஒவ்வொரு இரவுகளின்
தனிமை கூடுகையிலும்
இருளில் பிறப்பெடுக்கும்
உன் பிரதியான காதல்
ஆக்கிரமிப்பு செய்கிறது...

நினைவுகளாகிப் போன
நம் காதலின் நிஜங்களிலே
கூரிய நங்கூரமிட்டு,
நினைவலைகளில் தத்தளிக்கும்
நீயற்ற நிஜமான வாழ்க்கை...

சீக்கரம் விடியாதாவென
இரக்கமற்ற இரவுகளாலும்,
சுருங்கிப் போக மறுக்கும்
பகல் வேலைகளாலும்,
மாறி மாறி பந்தாடப்பட்டு
நிறுத்த நிலையின்றி
ஓடிக்கொண்டிருக்கிறது
எந்தன் வாழ்க்கை....