என்னை மன்னித்துவிடு..
மூன்று நேரமும்
உணவருந்தச் சொல்வாய்
நேரத்திற்கு - இன்றோ
பசியினை மட்டும்
உணவாய்க் கொண்டிருக்கிறது
எந்தன் வயிறு...
என்னை மன்னித்துவிடு..
இரண்டு விரலில்
பணத்தை கொடுத்தால்
திட்டிவிட்டு முறைப்பாய்...
இன்றும் அப்படியே
கொடுக்கிறது விரல்கள்
உன் திட்டல்கள் வேண்டி...
என்னை மன்னித்துவிடு..
நேரத்திற்கு உறக்கம்
கொள்ளச் சொல்வாய்..
இருள் பரவத் தொடங்கினாலும்
எனக்கு மட்டும்
விடியலாய் விழிப்பு...
என்னை மன்னித்துவிடு..
வெயிலில்
அலையாதே என்பாய்..
வெயிலின் சூட்டிலாவது
என்னுயிர் என்னிடம் தான்
உள்ளதென்று உரைக்கட்டுமென்று
திரிகிறேன் அன்பே....
என்னை மன்னித்துவிடு..
பிறர் பொருள்
நமக்கு எதற்கென்று
சொல்வாயடி - இன்று
உன் கணவருக்குச் சொந்தமான
உன் மீதான காதலும்,
நினைவுகளும்
என்னிடம் உள்ளதடி...
என்னை மன்னித்துவிடு..
No comments:
Post a Comment