Saturday, 30 April 2011

காதல் சொல்ல வந்தேன்

வெகுநாள் இதயம் துளிர்விட்டு
என்னுள் பூத்த காதல்
உரியவர் கை சேர காத்திருப்பு...

இதயம் பேசுவதெல்லாம் ஒருபொழுதும்
இதழ்கள் பேசுவதில்லையே..
நான் மட்டும் என்ன விதிவிலக்கா..

மெல்ல தலை தூக்கிப் பார்க்கும்
காதலை வெளியே எடுத்துப் போட
அவ்வளவு சீக்கரம் தைரியமில்லை...

வழக்கமாய் நீ வரும் வழியில்
மரமோடு மரமாய்
இலையாடிக் கொண்டிருக்கும் மனதோடு
கையில் உனக்கான காதல் வாழ்த்தோடு...

வழக்கமாய் வரும் நேரமும்
கடந்து போன காட்சியாய்,
கடந்திடும் ஒவ்வொரு நொடியும்
இதயம் உயிர் போய் வருகிறது...

நீ
வரும் வழி நோக்கி
வழிந்தோடும் என்னுயிர் தேக்கி
இமைகள் மூடும் முன்
விழியில் உன் உருவம் காட்டு...

Thursday, 28 April 2011

சுமை

புத்தக பாரம்
சுமந்திட ஆசை எனக்கு.
எனக்கான ஆசையில்
உனக்குச் சுமை சேர்க்க
எண்ணமில்லை தாயே.
ஏற்கனவே பதி இன்றி
குடும்பப் பாரம் சுமக்க
செங்கல் சுமக்கும் உன்னால்...

தனிமை

யாருமற்ற தனிமையில்
நீயும் நானும்...

உன்
இரகசியப் பார்வையில்
நம் நெருக்கம் குறைய,
நம்மைச் சுற்றியும்
ஒரு வெப்ப வளையம்
நமது உஷ்ண மூச்சில்..

உன் வெட்கம்
என்னைக் கொத்தி தின்ன,
என் ஆண்மை
நாணிக் குறுகிக் கொள்ள...

உனது குறுகுறு
காதல் பார்வையில்,
தனிமையின் வெப்பத்தில்
என் வெட்கம் யாவும்
வியர்வையாய் வெளியேற...

காது மடல் கடித்து
என் காதோரம்
உன் மூச்சுக் காற்று
இரகசியம் சொல்லி
ஏக்கம் கொள்ள வைக்கிறது
அன்பே உனது பெண்மை...

என்ன இரகசியமென்று
கைகளின் உரோமமும்
தலை தூக்கிப் பார்க்க...

அடுத்து என்னவென்ற
ஏக்கத்தில் மூளை
வழக்கத்தை விட
இன்னும் சுறுசுறுப்பாக...

முதன் முறையாய்
தெரிந்து கொண்டேன்
உரசிடாமலே பற்றிடும்
நெருப்புக் குச்சிகளை
நமது நிலையில்...

எரியும் தீயில்
நீருற்றி அணைக்காமல்,
கண்டும் காணாதவளாக
நடத்தியதை ஏதும்
தெரியாத விசமியாய்
எப்பொழுதும் போல
நிலையாகிறாய்....

என் ஆண்மை
ஏங்கித் தவிக்கின்றதடி
சில நிமிடங்களில்,
ஆண்மையாய் உருமாறிய
உனது பெண்மையில்...

நான்


சோதனைகளும், வேதனைகளும்
அவமானங்களும் வலிகளும்
தோல்விகளும் ஏமாற்றங்களும்
ஏக்கங்களுக்கும் விரக்திகளும்
என்னைப் பதம் பார்க்க
பட்டை தீட்டப்படும் வைரம் நான்...

காதலன் ஏக்கம்

ஒவ்வொரு நாளும் கழிகின்றது
வண்ணமான நாட்கள் வெறுமையாய்
உன்னிடம் காதலை சொல்லப்படாமலே...

உன்னிடம் சேர்ந்து விடலாமென
என்னிலிருந்து புறப்பட்ட இதயம்
காதலில் உன் முகவரி தெரியாமல்
நிற்கிறது அன்பே அனாதையாய்...

நிஜத்தை பார்த்தே நம்பிடா உலகில்
உன்னையே எண்ணிக் கொண்டிருக்கும்
நினைவுகளையா நம்பிவிடப் போகிறாய்...

பிறந்த இடம், புகுந்த இடமென்று
பெண்களுக்கு மட்டும் பொருந்துவதிலையே
உன் நினைவைச் சுமக்கும்
என் இதயத்திற்கும் தானடி...

வரதட்சணையாய் கண்ணீரையும
தூக்கம் மறந்த இரவுகளையும்
தனிமைப் பேய்க்கு இரையாகத் தந்தும்
இன்னும் ஏனடி மௌனம் கொள்கிறாய்...

என் வரிகளைப் போலவே
நீளும் உன் மௌனத்திற்கு
உன்னிதழ் திறந்து முற்றுப் புள்ளியோ
மனம் திறந்து கார் புள்ளியோ வையடி...
கண்டுகொள்கிறேன் என் காதலின் ஆயுளை...

உன்னை தொலைத்த நான்

உரமிட்டு பாதுகாத்து
எனக்கெனச் சொந்தமாய் எண்ணி
எப்பொழுது மலர்வாய் என நானும்
முப்பொழுதும் உன் கருத்தில் என நீயும்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்,
நீ மலர காத்திருக்க,
உரிமை என ஒருவன் வந்து
கே
ளாமல் பறித்துச் செல்ல,
உன்னைப் பறிகொடுத்த வலியில்,
ரோஜாவின் முட்கள் யாவும்
தொட்டால் குத்திட,
என்னிதயம் சூழ்ந்த உன் நினைவுகள்
நினைத்தாலே குத்துகிறதே...

எனக்கு பிடித்தவைகள்

மதி மாலை நேர மழை
நடு இரவு பௌர்ணமி.
நிலவோடும் நினைவோடும் தனிமை.
பிஞ்சுக் குழந்தையின் பற்றிடும் விரல்.
நண்பர்களுடன் பகிர்ந்துண்ணும் நேரம்.
இரவின் மொட்டை மாடி தனிமை.
என்னவள் ரசித்த வரிகள்.
புகைவண்டியின் ஜன்னலோர இருக்காய்.
நீண்டதொரு இரவு இருசக்கர பயணம்.
அவள் தோள் சாய்ந்த தூக்கம்.
நண்பனின் உரிமைக் கோபம்.
அரிதாகிப் போன சொந்தங்களின் கூட்டம்.
செயற்க்கைதனமிலா கிராமத்து திருவிழா.
வீரத் தமிழனின் தாரை தப்பட்டை.
தோல்வியினைத் தந்திட்டாலும் காதல்.
உப்பு கரித்திட சந்தோசக் கண்ணீர்.
தொலைந்து போன சிறுவயது பண்டங்கள்.
முழுதாய் என்னைச் செதுக்கிய தோல்விகள்.
நிரந்திரமில்லை எனத்தெரிந்தும் போராடும் வாழ்க்கை.

Tuesday, 26 April 2011

வாழ்க்கை

வாழ்க்கை
விநோதப் பயணத்தில்
விசித்திர சாலை...

நேரடிப் பார்வைகள்
இங்கு செல்லுபடியாகா...
கானல் நீராய் காட்சி தரும்
வெற்றிகளும் வாய்ப்புகளும்
அற்ப மனிதர்களின்
ஆசைக்கு நெய்யூற்றும் வேலை...

வாய்ப்புகள் கூட உனக்கு
நிரந்தரமில்லை என
தலையில் குட்டிச் சொல்கிறது
நிரந்தரமில்லா உலகம்...

தோல்விகள் நிழலாய்,
வெற்றிகள் நிலவாய்,
சங்கடங்கள் உடன்பிறப்பாய்,
விமர்சனங்கள் உற்ற தோழனாய்,
விரக்திகள் உடையாய்
ஏமாற்றமே சொத்தாய் கொண்ட
சராசரி மானிடன் நான்...

தன்னம்பிக்கையில்
தயங்காது உழைத்தாலும்,
முயற்சியில்
மும்முரமாய் இருந்தாலும்,
திட்டத்தில்
கட்சிதமாய் செயல்பட்டாலும்,
வெற்றி மட்டும்
எனைப் பார்த்து பல் இளிக்க...

ஒவ்வொருமுறை தோல்வியிலும்
படிக்கட்டாய் ஏறிப்போக,
முயற்ச்சியின் அறுவடையாய்
கண்களுக்கு புலப்படா வெற்றி
நீண்டு செல்லும் படிக்கட்டுகளும்...

தத்துவங்கள் சொன்னபடி
விடாமுயற்சி கொண்டால்,
அடாது முயற்சியிலும்
விடாது தோல்விகள்...

மெழுகாய் மனம் கொண்டாலும்
ஏமாற்றத்தின் ஒளியில்
இரும்பாகிப் போகிறது..

போதுமடா சாமி என்று
விரக்தியின் விளிம்பில்
உயிர் துறக்க நினைத்தாலும்
அவ்வளவு சீக்கரம்
விடுவேனா என்று
விடாக்கொண்டனாய் வாழ்க்கை...

Saturday, 23 April 2011

தொலைபேசியின் ஏக்கக் குரல்

ஏக்கங்கள் பலவோடும்
சந்தோசப் பெருக்கோடும்
காத்திருக்கும் நொடிகள் யாவும்
நினைவிலே தித்தித்திட,
கேட்கப் போகும் குரலுக்காய்
இரவிலும் செவிகள் விழித்திடும்...

எனை எடுத்துப் பேசிட
கொஞ்சல்களும், கெஞ்சல்களும்
காதலும் களிப்பும்
அலையோடிக் கொண்டிருக்கும்..

இந்நிமிஷம் இப்படியே
வருடமாய் நீளாதா என
ஏக்கம் கொள்ள வைக்கும்.

குரலைக் கேட்டிடவே
தவமிருக்கும் நேரத்தில்,
சண்டை, சந்தேகங்களுக்கு
வார்த்தையில் இடம் கிடைத்ததாய்
என்னிடம் வரலாறில்லை...

காதல் என்றால்
இவ்வளவு இனிமையா என்று
என் கண்ணே பட்டதோ என்னவோ,
உருவெடுத்தான் என் பங்காளி
காதுகளின் உடன் பிறப்பாய்
விரல்களின் நகக்கண்ணாய் ,
உடலின் உறுப்பு ஒன்று
உருமாறி அலைபேசியாய்...

சொல்ல விஷயங்கள் ஆயிரம் இருக்க
பேசிட மணிகள் சிறிதாயிருக்க,
களிப்புகளை மட்டுமே
காதல் மொழி பேசினார்,
வைத்திட மனமின்றி
என்னை அணைத்துச் சென்றனர்...

இன்றோ இயந்திரத்தின் விசையில்
உயிரோடிருக்கும் உலகத்தில்,
காதலும் அடிமைப்பட்டதே..

அலைபேசியின் இணைப்பில்
நொடிப்பொழுதும் பேச்சு,
கடந்த நொடியில் விட்ட மூச்சும்
பரிமாறிய பின்பு ஏதுள்ளது பேச,
நிமிடங்கள் மௌனமாய் பயணிக்க,
சமாளிக்க செய்த பொய்கள் தெளிய
அடுத்து பேசிட சண்டைகள்...

எனை வைத்திட மனமில்லாது
ஏங்கிய காலம் கடந்து,
எப்பொழுது வைத்திடுவோமென்று
எண்ண வைக்கிறது...

காதலில் ஊடல் சகஜம்தான்
ஊடலே காதலாகிப் போனால்,
சக்கரையும் எட்டிக்காய் தான்...
கசந்த பின்பு
வாழ்க்கைப் பந்தியில்
எட்டிக்க்காயக்கு இடமேது...
சேர்ந்த வேகத்தை விட
மிகவும் வேகமாய் பிரிவு...

பிரிந்து போன ஜோடிகளை
சேர்த்திட எண்ணி நான் அழைக்கையில்,
பெண்ணின் எண்ணோ
"தற்பொழுது உபயோகத்தில் இல்லை"
ஆணின் எண்ணோ
"தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்
வேறொரு இணைப்பில் உள்ளார்"...

திரைப்பட நினைவுகள்


நாம் ஒன்றாய் பார்த்த
திரைப்படங்கள் யாவும்,
இன்றும் காண நேரிடுகையில்
நம் காதல் தாண்டி
எண்ணத் திரையில் ஓடுகிறது...

ஒவ்வொரு படத்திற்கும்
ஒவ்வொரு ஞாபகம்.
நமக்கு பிடித்ததை சொல்லும்
கதா பாத்திரங்களின் வாழ்க்கையாய்
நாமும் மாறிப்போன மாயமென்னடி..

சந்தோசமாய் முடிந்து போன
காட்சிகளில் கூட
கண்கள் கலங்கி நிற்கிறதே..

அருகருகே அமர்ந்து
என் தோளில் நீ சாய்ந்து
ஓடிய நிழல்கள் தாண்டி - இன்று
உருவமாய் வந்து மறைகிறது...
என் தோளில் சாய்ந்துள்ள
உந்தன் நினைவுகளோடு...

புதைந்து மட்கிப் போன
காதலின் சிரத்தை வெளியே
எடுத்துப் போடும் அவலம் தாண்டி
திருமணத்திற்கு பிறகு
சேர்ந்து பார்க்க வேண்டுமென்ற
நாம் பார்த்து இரசித்த காட்சிகளும்
ரணமாக்குகிறது என் இதயத்தை...

உனக்கும் என்னைப் போலவே
வலியும் வேதனையும் உண்டென்ற
நம்பிக்கையில் தானடி
நம் காதலின் ஆன்மா
உலாவிக் கொண்டிருக்கிறது..

சொல்லிடாதே வலி இல்லையென
திரையரங்கில் அனாதையாய் கிடக்கும்
நுழைவுச் சீட்டாய்,
இறந்து போகும் என் காதல்
அதனைச் சுற்றி மொய்த்திடும்
நம் காதல் நினைவுகளோடு...

காரணம்

கவிதை எழுதிய காகிதமெல்லாம்
நனைந்திடும் காரணத்தை
இன்று தாண்டி தெரிந்து கொண்டேன்...
என் கண்ணீர் யாவும்
பேனையின் வழியாய்
வார்த்தையாகக் போவதைக் கண்டு...

நகர்ந்திடாமல் இருந்திட

இயலாத ஒன்றை
நினைப்பது ஒன்றும்
மனதிற்கு புதிதில்லையே...
உன்னுடன் கை கோர்த்து
நடை சென்றிட
தூரம் மட்டும் சிறிதும்
நகர்ந்திடாமல் இருந்திட..

விரோதம்

விரோதம் வளர்க்காதடி
என் விரல்களுக்குள்.
நடக்கையில்
ஒற்றை விரல் பிடித்து...

ஏனோ?

உன்னைக் காண வரும்பொழுது
இந்த இரண்டு மைல் தூரமும்
இரண்டு அடிகளாய் மாறத் தோன்றிட,
உன்னுடன் பயணிக்கையில் மட்டும்
முடிவற்ற தூரமாகிட தோன்றுவதேனோ...


இடமாற்றம்

இப்படியே
உனது விரலிடுக்கின்
பிடியின் வழியே
கொஞ்சம் கொஞ்சமாய்
உடல் மாறிக் கொண்டிருக்கிறது
காதல் அணுக்கள்..

ஏக்கம்

என் தோளில் கைபோட்டு
பேச வேண்டுமென்ற
உனது எண்ணம்
இன்று ஈடேறியது - கூடவே
உனது தாவணியின்
அணைப்பிற்கு ஏங்கிய
எனது சட்டையின் ஏக்கமும்...

பொய்

என்னை ஏமாற்றிட
நீ சொல்லும் கூற்று
பொய்யெனத் தெரிந்தும்,
உண்மையாக்கிட முயலும்
எனதும் இதயம்.
என்னை ஏமாற்றியதில்
உனக்கான சிரிப்புகளுக்காக...

இறுக்கம்

தோள்கள் உரசிட,
அருகாமையில் தேகம் பேசிட,
நடை பயிலும் வேளையில்,
இன்னும் கூடுதலாகவே
தெரிந்து கொண்டேனடி அன்பே..
உன் அன்பினை, காதலை
ஆசையினை, பற்றினை
விரலிடுக்கின் இறுக்கத்திலே...

பொறாமை

சொல்லிவையடி கடிகாரத்திடம்..
உன்னைப் பற்றி
நினைக்கும் பொழுது மட்டும்
வேகமாய் சுழலுகிறது
பொறாமையில்...

விழி

அர்ச்சுனனின்
வாரிசாடி நீ.
புருவமென்னும்
வில்லில் நாணேற்றி,
விழியில்
காதல் அம்பினை
விடுகிறாயே...