உன்னைப் பற்றி
கவிதை எழுத தோன்றிட,
எதைப் பற்றி எழுதுவதென
எனது எண்ணச் சாலையில்
சற்று பின்னோக்கி செலுத்தப்பட்டது
நம் காதல் பேருந்து...
தனியான பயணத்தில்
நீ துணையாக வந்ததில் தொடங்கி,
அழகு, காதல், கோபம்,
சண்டைகள், கண்ணீர், பிரிவு என
ஒவ்வொரு நிறுத்தமாய்
நின்று ரசித்தது மனது....
சில நிறுத்தங்களில் சிரிப்பும்
சில நிறுத்தங்களில் வெட்கமும்
சிலதுகளில் அசடும் வழிந்தபடியே
மெல்ல ஊர்ந்து போகிறது...
மீண்டும் ஒரு காதல்
மீண்டும் அந்த இன்பம்
மீண்டும் ஒரு பிறப்பாய்
சந்தோஷ ஊற்று என்னுள்...
பயணத்தின் போதே
இறுதியும் முடிவு செய்யப்படுகிறது...
இறங்குமிடம் வருகையில்
மீண்டும் வாழ்ந்த வாழ்க்கையின்
திளைப்பிலும் லேசான கண்ணீரிலும்
முற்றுப் புள்ளி வைத்தேன்
கவிதை எழுதும் எண்ணத்திற்கு...
இக்கவிதையோடு நம் காதல்
என்னை விட்டு நீங்காமல்
இன்னும் பலமுறை
இப்படியே என்னுள் ஓடிட...
No comments:
Post a Comment