ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கனவாய்
உற்பத்தி செய்திடும்
அந்தப் பட்டறை...
கூரான கனவுகளால்
தினம் தினம் என்னை
பதம் பார்த்துச் செல்லும்...
அதன் நினைவை
கண்கள் ஓரம்
கண்ணீர் தடம்
விடுத்துச் செல்லும்...
என்னுயிர் பருகிட
புதுப் புது உருவில்,
என் காதலியாய்,
நெருங்கி அமர்ந்திடும் வேளையாய்,
தாலி கட்டிடும் தருணமாய்,
வாரிசு தந்திடும்
பிறப்பின் நேரமாய்,
ஒவ்வொரு அரிதாரம் கொண்டு
என்னை மயக்கும்...
நிரந்தரமில்லை
எனத் தெரிந்தும்
நிஜமாகத் தோன்றும்...
சில நேரம்
நிஜமாகிப் போனதாய்
மதி மயக்கும்...
என்னோடு
நீ இருந்த பொழுது
தலையில் வைத்து
கொண்டாடி,
இன்று ஏன் வரவில்லை என
உரிமைக் கேள்வி தொடுத்த
கனவுகளை,
நீயற்ற நாட்களில்
இரவின் பிடியில் சிக்கிடுகையில்
தற்கொலை செய்யக் கேட்கிறேன்...
சில நேரம்
கனவுகளை கொலை செய்ய
தைரியமும் இன்றி,
கனவுகள் தரும்
வலிகளைத் தடுக்கும்
வழி தெரிந்திடாமல்,
உறக்கமற்ற
இரவினைத் தேடுகிறேன்...
No comments:
Post a Comment