எத்தனை முறை எச்சிலில்
கன்னம் நனையத் தந்தாலும்
மீண்டும் மீண்டும்
கெஞ்சிக் கேட்கிறது இதயம்...
என் கேசம் களைத்து
விளையாடும் உரிமை
உனக்கு மட்டுமே என
மாற்றிக் கொண்டாய்...
கண்கள் மூடி
கண்ணடித்து இதயம்
கொள்ளை இடுகையில்,
காவல் நிலையம் சென்று
புகார் தரவும் மனமில்லை...
தனியே விட்டுச் செல்கையில்
கண்ணில் பனிக்கும் கண்ணீரில்
இதயம் கனத்துப் போகிறது...
உணவூட்டும் வேளையில்
பற்களில் சிக்கிய
விரல் கடித்து சிரிக்கையில்,
வலி மாறி சுகம் தானெனக்கு...
உன் உதட்டில் வழியும்
பருக்கையின் வருகை கேட்கும்
எந்தன் நாவும்...
மனம் சில நேரம்
தடம் மாறிப் போகையில்...
உன் நினைவுகள் நிலையாக்கி
ஒருவழிப் படுத்துகிறது...
அரைகுறை ஆடையணிந்து
உன் கொள்ளை அழகை
பார்த்து ரசிக்க அடிக்கடி
மனம் ஏங்குகிறது...
உன் விரல் பிடித்தே
நகர்வலம் வந்திடவும்
எந்நேரமும் தயாராக
எந்தன் பாதைகள்...
உன்னைப் பற்றி
சொல்லிட வேண்டுமாயின்
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிகளும்
வரிகளாய் மாறிக்கொண்டே
தானிருக்கும்...
என்றும் உன் நினைவுகளுடன்
உன் தந்தை....
No comments:
Post a Comment