Thursday 10 February, 2011

புதிய உலகம்

என்னை தனியே விடுத்துச் செல்லும்
என்னுயிர் எனச் சொல்லி
உன்னைப் பிரித்துப் பார்க்க
மனமில்லையடி எனக்கு...

நிழலைத் தொலைத்து
நிலையில்லா ஓடையாய்
தவித்த எனக்கு
உற்ற தோணியாகி,
உரித்தான தோழியாக,
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னோடு சேர்ந்திடும்
நிழலானாய்...

முடிந்து போன வாழ்க்கையென
முற்றுப்புள்ளி வைத்த என்னில்
முழுமையாய் ஆட்கொண்டாய்
முழுமனதாய் உனதாக்கினாய்....

உண்மையான அன்பிற்கு
உருவம் பொருட்டில்லை என
உன்னத மனதிலே ஒற்றிக்கொள்ள
உரிமை தந்த எனக்குரியவளே...

புதிதாய் பூக்க நிற்கும் காதலுக்கு
புன்முறுவல் காட்டிடத் தெரியவில்லை...
பட்டுப் போன செடிக்கு நீரெதற்கு,
விதி கண்ட கைம்பெண்ணிற்கு
வண்ணமாய் சேலை எதற்கு,
என எனக்கான கேள்விகள்
எனைச் சுற்றிய வேலியாய் என்னுள்ளே...

உன் அன்பென்னும் மழைக்கு
தாக்குப் பிடிக்கத் தெரியவில்லை அன்பே,
பட்டுப் போனபடியே வாடி நிற்க...
பாதியில் தொலைந்த பார்வையை
திரும்பப் பெற யாருக்கு ஆசையில்லை...

உன் உரிமைப் பேச்சும்
கள்ளமில்லா அன்பும்
எதிர்பார்ப்பில்லா அக்கறையும்
மெல்ல மெல்ல உரமிட
காதல் துளிர வித்திட்டாய்...

நாட்கள் அதிகரிக்க
உன் அடைமழை அன்பில்
தானாகவே கழன்று போனது
என்னைப் பிணைத்திருந்த கேள்விகளும்...

மண் முட்டி வளர்த்தோங்கும்
புது வெளிச்சம் பார்த்திட
தளிராய் மெல்ல துளிர்த்தது
காதல் புதிதாய் என்னுள்ளே...

வலிகள் வடுவாய் மாறிட
தயக்கங்கள் தானாய் விலக,
ஏக்கங்கள் உன்னிடம் சரணடைய,
உன்னை முழுதாய் எனதாக்கி
இன்று நாமாக்கி போகின்றோம்...

தொலைத்த வலிகள் தெரிந்தவனாய்
உன்னை காக்கும் வழி புரிந்தவனாய்
காதலை இறுகப் பிடித்துள்ளேன்
என் இதயக் கரத்தினுள்...

மறுமுறையும் தொலைத்து தவிக்க
நானொன்றும் அறிவீலி இல்லை.
நிருபிப்பேன் கரம் பிடித்து
உன் காதல் என்னைப் பிடித்ததில்...

ஜென்மங்களில் நம்பிக்கை
இன்றுவரை இல்லையடி எனக்கு...
வாடி என் காதல் துணைவியே
வாழ்ந்துவிடுவோம் காதலின்
இனிமைகளை மொத்தமாய்
இப்பிறவியிலேயே...

No comments:

Post a Comment